தசரா முடிந்ததும், ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு : அரசு பதில்
தசரா முடிந்ததும், ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு : அரசு பதில்
தசரா முடிந்ததும், ஐகோர்ட்டுக்கு பாதுகாப்பு : அரசு பதில்
ADDED : செப் 27, 2011 11:29 PM
சென்னை: 'தசரா விடுமுறை முடிந்து திறக்கும் போது, ஐகோர்ட்டுக்கு முதல் கட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கும்' என, தமிழக அரசு பதிலளித்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தம் ஒழுங்குபடுத்துவதை அமல்படுத்தக் கோரி, வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. 2008ம் ஆண்டு ஐகோர்ட் வகுத்த முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்துவதாக, அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவ்வழக்கு, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை 29ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. உள்துறைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனு: சில எதிர்பாராத சம்பவங்களால், ஐகோர்ட்டில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர முடியாமல் போய் விட்டது. டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி டி.முருகேசன் தலைமையில், பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது. ஐகோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள், பொது மக்கள், அரசு அதிகாரிகளுக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை, முதல் கட்டமாக வரையறுக்குமாறு, அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். வழக்கறிஞர்களுக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது.
மெட்டல் டிடெக்டர்கள் நிறுவுவதைப் பொறுத்தவரை, கைவசம் இருக்கும் டிடெக்டர்களை, அனைத்து நுழைவு வாயில்களிலும் நிறுவ வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களும், முதல் கட்டமாக நுழைவு வாயில்களின் கதவுகளில் பொருத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மற்ற இடங்களில் பொருத்துவதைப் பற்றி, விவாதித்து முடிவெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வசதிகள் அனைத்தும், தசரா விடுமுறையின் போது செய்யப்படும். விடுமுறை முடிந்து ஐகோர்ட் திறக்கும் போது, முதல் கட்ட ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.


