PUBLISHED ON : ஜூலை 14, 2011 12:00 AM

மனது வைப்பாரா மாயாவதி?
'ஆட்சியில் இருக்கலாம்.
அதற்காக இந்தளவுக்கு அலட்சியமாக இருக்க கூடாது'என, உ.பி., மாநில அரசில் கட்சிகளிடையே, புலம்பல் குரல்கள், பலமாகவே கேட்கின்றன. முதல்வர் மாயாவதியின் நடவடிக்கையால் தான், இப்படி வருத்தப்படுகின்றனர். 'டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை, உ.பி., மாநிலத்தில் உள்ள விசாலி வரை நீட்டிக்க வேண்டும்'என்பது, மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக, பெரிய அளவில் போராட்டம் எல்லாம் நடத்தினர். ஒருவழியாக, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. கடந்த வாரம், இத்திட்டம் துவக்கி வைக்கப்படுவதாக இருந்தது. முதல்வர் மாயாவதி, கொடியசைத்து, இந்த திட்டத்தை துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், துவக்க விழா, திடீரென, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. காரணம் என்ன தெரியுமா? துவக்க விழாவில் கலந்து கொள்வதற்கு முதல்வர் மாயாவதிக்கு நேரம் இல்லையாம். விழா ஒத்தி வைக்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், ஆளும், பகுஜன் சமாஜ் கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 'விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டத்தை தள்ளி வைத்தால், தேர்தலின்போது, அவர்களை எப்படி சந்தித்து, ஓட்டு கேட்பது. கட்சியின் வீழ்ச்சிக்கு, இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக அமைந்து விடாதா? தேர்தல் நெருங்குகிறது என்பதை, முதல்வரிடம் யாராவது ஞாபகப்படுத்தினால், நன்றாக இருக்கும்'என, ஆதங்கப்படுகின்றனர்.


