Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு

நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு

நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு

நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டா போட்டி புதுகையில் அரசியல் கட்சியினர் மல்லுக்கட்டு

ADDED : செப் 10, 2011 03:45 AM


Google News

புதுக்கோட்டை: விரிவு படுத்தப்பட்டுள்ள புதுக்கோட்டை நகராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.புதுக்கோட்டை நகராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டதால் 39 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை 37 ஆக குறைந்தது.

இந்நிலையில் நகராட்சியை ஒட்டிய புதுக்கோட்டை கிராமப் பஞ்சாயத்து பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் தற்போது நகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.அதாவது, புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதிகள் ஐந்து நகராட்சி வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகராட்சியின் வாக்காளர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் ஆண்கள் 44 ஆயிரத்து 412 பேர், பெண்கள் 45 ஆயிரத்து 261 பேர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மக்கள் தொகை அடிப்படையில் புதுக்கோட்டை நகராட்சி விரிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் நடைபெறவுள்ள முதல் உள்ளாட்சிமன்ற தேர்தல் என்பதால் மனைவியை தலைவர் நாற்காலியில் அமரவைத்து அழகுபார்க்க அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.அ.தி.மு.க., சார்பில் போட்டியிட முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மனைவி சுபத்ரா ராஜேந்திரன் (சிட்டிங் கவுன்சிலர்), நகரச் செயலாளர் பாஸ்கர் மனைவி விஜயஸ்ரீ, முன்னாள் மாவட்ட இணைச் செயலாளர் ராணி என்ற பப்பி, முன்னாள் நகர அவைத்தலைவர் ராமதாஸ் மனைவி பிரபாவதி உட்பட பலர் விருப்பமனு வழங்கியுள்ளதோடு, ஆதரவாளர்கள் மூலம் சீட் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் துவக்கியுள்ளனர். தி.மு.க., சார்பில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு சகோதரி மணிமேகலை ராஜேந்திரன் (சிட்டிங் மாவட்ட பஞ்., கவுன்சிலர்), நகராட்சி துணைத் தலைவர் நைனாமுகம்மது மனைவி அவ்வாக்கனி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு மனைவி செந்தாமரை, சிட்டிங் கவுன்சிலர் வளர்மதி, மகளிரணி செயலாளர் விஜயா உட்பட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இதுபோன்று தே.மு.தி.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க., ஐ.ஜே.கே உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடவும் பெண்கள் பலர் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். தலைவர் பதவி மட்டுமின்றி கவுன்சிலர் பதவிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.



பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து மாணவர்கள் 40 பேர் காயம்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 40 மாணவர்கள் காயமடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த புல்வெட்டாம்விடுதியில் உள்ளது நவீனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.இவர்கள் நாள்தோறும் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான மகேந்திரா சீட்டட் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றுக்காலை 9.30 மணிக்கு கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.திருவோணம் பகுதியைச் சேர்ந்த சண்முகம்(45) வேனை ஓட்டிச்சென்றார். பிலாவிடுதி அருகே சென்றபோது டிரைவர் சண்முகம் மீது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர் திடீரென்று சாய்ந்துள்ளார். இதில், டிரைவர் நிலைகுலையவே கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோரம் இருந்த பனை மரத்தில் மோதி கவிழ்ந்தது.இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் சூரியா(12), யோகப்பிரியா(16), பிரவீண்(10), பிரியா(13), குமரேசன்(11) மனோகரி(9), அஸ்வின் பானு(12) உட்பட 40 பேர் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து விசாரித்துவரும் கறம்பக்குடி போலீஸார், வேன் டிரைவர் சண்முகத்தை கைது செய்துள்ளனர்.





விவசாயி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நிலத்தகராறு தொடர்பாக விவசாயியை கொலை செய்த அவரது உறவினருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வக்கோட்டை அடுத்த துலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி(55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாணிக்கம்(65) என்பவருக்கும் வீட்டு மனையை அளந்து ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் அப்பகுதியை சர்வே செய்வதற்காக வருவாய்த்துறையினர் சென்றுள்ளனர். ரெங்கசாமியின் வீட்டு மனையை வருவாய்த் துறையினர் அளந்தபோது மாணிக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக இருவருக்கும் இடையே வருவாய்த்துறையினர் முன்னிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரெங்கசாமி தாக்கியதால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் கடந்த 2010 செப்., 4ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீஸார், ரெங்கசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி முரளிசுந்தரம், கொலை குற்றத்தில் ஈடுபட்ட ரெங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பளித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us