Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கதர் துறை காலணி உற்பத்தி மைய முறைகேடுகள் குறித்து விசாரிக்க...கதறல்

கதர் துறை காலணி உற்பத்தி மைய முறைகேடுகள் குறித்து விசாரிக்க...கதறல்

கதர் துறை காலணி உற்பத்தி மைய முறைகேடுகள் குறித்து விசாரிக்க...கதறல்

கதர் துறை காலணி உற்பத்தி மைய முறைகேடுகள் குறித்து விசாரிக்க...கதறல்

ADDED : அக் 07, 2011 12:54 AM


Google News

கதர் கிராமத்தொழில் வாரியத்தின் அம்பத்தூர், பெரம்பூர் காலணி உற்பத்தி மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு விசாரிக்க வேண்டுமென, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இரு மையங்களுக்கும், அரசு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டுமென, தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியக் கட்டுப்பாட்டின் கீழ், அம்பத்தூர் எஸ்டேட், 2வது பிரதான சாலை மற்றும் ஓட்டேரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள, பெரம்பூர் கிருஷ்ணதாஸ் சாலை ஆகியவற்றில், காலணி தயாரிப்பு அலகுகள் உள்ளன. இவற்றில், கடந்த 2008ம் ஆண்டு வரை, தலா 150 முதல், 200 பேர் வரை வேலை செய்து வந்தனர்.



இரண்டு கோடி ரூபாய் லாபம்: இங்கு காவல் துறையினருக்கான, காலணி, பெல்ட், துப்பாக்கி உறை மற்றும் அரசு ஆவணங்கள் வைக்கப்படும் கோப்பு, ஆகியவை தயாரிக்கப்பட்டன. இந்த அலுகுகளின் ஊழியர்களில், 'அம்யூனிஷன் பூட்' எனப்படும் ஆயுதப்படை போலீசாருக்கான காலணிகளை தயாரிப் பதில், திறமை வாய்ந்த வடமாநில தொழிலாளர்களும் அடங்குவர். 1994ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வந்த இந்த அலகுகளில், ஆண்டுக்கு, ஐந்து முதல் ஏழு கோடி ரூபாய் வரை, தமிழ்நாடு காவல் துறையின் ஆர்டரின் பேரில், இப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.



ஆண்டுக்கு, 1.25 கோடி எண்ணிக்கையிலான காலணிகள், காவல் துறையின் மூலம் ஆர்டர் கிடைத்து, தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம், 1994ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை, அந்த யூனிட்டுகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் கணிசமான வருவாய் கிடைத்துள்ளது. தரமான தயாரிப்பு காரணமாக, ஆண்டுக்கு ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்தது. தரமற்ற மூலப்பொருளால் தள்ளாட்டம்:தற்போது இந்த அலகுகள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கின் றன. கடந்த 2008ம் ஆண்டு வரை, அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அலகிலும், 200 பேர் வரை பணியாற்றினர். ஆனால், இன்று அலுவலர் பணியாளர் உட்பட மொத்தமாக, 20 முதல் 30 பேர் வரை மட்டுமே உள்ளனர். இந்த அவல நிலைக்கு காரணம் குறித்து விளக்கிய, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், ''கடந்த தி.மு.க., ஆட்சியில் அப்போதைய கதர்வாரிய அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி தலைமையின் ஆசீர்வாதம் பெற்ற ஒருவர், ஷூ, பெல்ட் ஆகியவை தயாரிப்பிற்கான தோல் மூலப்பொருட்களை வழங்க துவங்கினார். அவர் வழங்கிய தோல் தரமற்றதாக இருந்தது,



அதனால் 2008ம் ஆண்டு காவல் துறைக்காக தயாரிக்கப்பட்டவைகளில், 35 ஆயிரம் ஜோடி காலணிகள் தரமற்றவை என்று காவல் துறை உயர் அதிகாரிகளின் ஆய்வில் நிராகரிக்கப்பட்டது.'' மேலும், ''2009ம் ஆண்டு காவல் துறை பொருட்கள் தயாரிப்பிற்கான ஆர்டர் கிடைக்கவில்லை. 2010ல் ஆர்டர் கிடைத்தும், தயாரிப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தற்போதைய அமைச்சரையும் வளைக்க முயன்று வருகின்றனர். அதன் மூலம், கடந்த ஆட்சியில் கதர்துறையில் நடந்த முறைகேடுகளை மூடி மறைக்கவும் முயற்சிக்கின்றனர்,'' என்றனர். மூன்று மாத சம்பள பாக்கி: அம்பத்தூர் யூனிட், 10 கிரவுண்டு பரப்பளவிலும், பெரம்பூர் யூனிட் மூன்று ஏக்கர் அளவிலும் உள்ளது.



உற்பத்தி குறைவு காரணமாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், கட்டடங்கள், உரிய பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டுள்ளன. கதர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவொற்றியூர், மாதவரம் கூட்டுறவு சங்கங் களுக்கு சொந்தமான இடங்கள், உரிய அனுமதியின்றி முறைகேடாக தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இத்தகைய முறைகேடுகளால், இரு யூனிட்டுகளிலும் வேலை செய்து வந்த பலர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தற்போது வேலை செய்யும் ஒரு சிலருக்கும் கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காத நிலை உள்ளது.



லாபத்தில் இயங்கி வந்த இரு உற்பத்தி மையங்களும் நஷ்டமடைய காரணமானவர்களையும், தரமில்லாத பொருள்கள் வழங்கல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டவர்களையும் உரிய விசாரணை மூலம் கண்டறிந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே, இரு உற்பத்தி மையங்களும் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.



- அ. ஜமால் மொய்தீன் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us