ADDED : செப் 30, 2011 01:02 AM

சனா : ஏமன் தலைநகரில், அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடக்கிறது.
ஏமன் அதிபராக, அலி அப்துல்லா சலே கடந்த 32 ஆண்டுகளாகப் பதவியில் நீடித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி, கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். 'நான் பதவி விலகினால், அல் - குவைதா பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள்' எனக் கூறி, பதவியிலிருந்து இறங்க மறுத்து வருகிறார் சலே.
அதிபர் மாளிகை மீது, கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், சலே தீக்காயம் அடைந்தார். இதனால், சவுதியில் மூன்று மாத காலம் சிகிச்சை பெற்று, சமீபத்தில் நாடு திரும்பினார். அதிபர் மீண்டும் நாடு திரும்பியதால், ஆத்திரமடைந்த கிளர்ச்சியாளர்கள், அரசுப் படைகளுக்கெதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சண்டையில், ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தனர். இதைத் தொடர்ந்து நடந்த சண்டையில், 40 பேர் கொல்லப்பட்டனர். நேற்றும் தலைநகர் சனாவில், இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை தொடர்ந்தது. இதில், எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் தெரியவில்லை.