Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கேரளாவில் புதிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

கேரளாவில் புதிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

கேரளாவில் புதிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

கேரளாவில் புதிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வலியுறுத்தல்

ADDED : ஆக 08, 2011 03:32 AM


Google News
திற்பரப்பு : கேரளாவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய உணவு பாதுகாப்பு சட்டத்தை போல் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.மனிதனின் உயிர் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது உணவு. இந்த உணவில் கலப்படம் இருந்தால் பெரும் தீங்கு விளைவிக்கும். சரியான உணவு சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே நோய் அணுகாது. கலப்பட உணவு சாப்பிடுவது தீயபழக்கங்களை விட கூடுதலாக உடலை பாதிக்கும்.தற்போதைய சூழலில் லாப நோக்கில் செயல்படும் வியாபார யுக்தி காரணமாக உணவு பொருட்களில் கலப்படம் சேர்ப்பது சாதாரணமாக நடந்து வருகிறது. தேயிலை முதல் எண்ணெய் வகைகளில் வரை கலப்படம் செய்யப்படுகிறது. உணவு தயாரிப்பு கம்பெனிகள் சேர்க்கும் கலப்படம் ஒருபுறமிருக்க அதை பயன்படுத்தி உணவு தயாரிக்கும் இடங்களில் மீண்டும் கலப்படங்களை பயன்படுத்துகின்றனர்.சிறிய லாபத்திற்காக டீ கடைகளில் பயன்படுத்தும் கலப்பட தேயிலை தூளினால் டீ குடிப்பவர்கள் பெருமளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. மிளகு, மல்லி போன்ற மசாலா பொடிகளிலும் கலப்படங்கள் சாதாரணமாக செய்யப்படுகிறது. குடிக்க பயன்படுத்தும் பாட்டில் தண்ணீர் கூட சில சமயங்களில் தீங்கு விளைவிக்கும் விதமாக உள்ளது.

உணவில் கலப்படம் செய்யும் பொருட்களை கண்டுபிடித்தால் கூட சட்ட நடவடிக்கைகளில் இருந்து எளிதில் வெளிவர முடிவதால் தவறுகளை செய்பவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் அத்தவறுகளை திரும்ப திரும்ப செய்கின்றனர். வெளிநாடுகளில் உணவு வகைகளில் கலப்படம் செய்வது, உணவு வகைகளை தரம் குறைவாக தயார் செய்வது போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதால் அங்கு ஹோட்டல்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கலப்படமின்றி பொருட்கள் கிடைக்கிறது.இந்நிலையில் கேரளாவில் புதிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அளவில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கும் அளவிற்கு இந்த புதிய சட்டபிரிவுக்கு அதிகாரம் உள்ளது. உணவு வகைகளின் தரத்தை குறைக்கும் அளவிற்கோ, உயிருக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

இதுபோன்று உணவு பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் தனியாக இயங்கும் ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி கோர்ட்டுகள் துவங்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சட்டப்படி உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளும், தயார் செய்பவர்களுக்கும், வினியோகிப்பவர்களும் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மூன்று மாதங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு இச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், முதலாவதாக சபரிமலை பகுதிகளில் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உணவு பொருட்களில் கலப்படம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை களையவும், இதனால் தினமும் நோயாளிகளாக மாறும் சாதாரண மக்களை பாதுகாக்கவும் தமிழகத்திலும் இதுபோன்ற சட்டத்தை கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us