Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை : உணவு அமைச்சர் எச்சரிக்கை

அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை : உணவு அமைச்சர் எச்சரிக்கை

அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை : உணவு அமைச்சர் எச்சரிக்கை

அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை : உணவு அமைச்சர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 28, 2011 09:57 PM


Google News
Latest Tamil News

சென்னை : ''போலி பட்டியல் போட்டு அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக உணவு அமைச்சர் புத்திசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது வினியோகத் திட்டச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

ஆய்வுக் கூட்டத்தில், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜதீந்திரநாத் ஸ்வைன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் பாலசந்திரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைகள் மற்றும் குடும்ப அட்டை குறித்த பிரச்னைகளை கால தாமதமின்றி தீர்த்து வைத்தல் குறித்தும், பொது வினியோகத் திட்ட அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் புத்திசந்திரன் பேசியதாவது:

ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் இலவச அரிசி, உரிய முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டியது அலுவலர்களின் கடமை. ரேஷன் கடைகளில் உண்மையான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும். போலி பட்டியல் போட்டு, அரிசி கடத்தும் அங்காடி பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது வினியோகத் திட்ட அரிசி பதுக்கல், கடத்தலில் ஈடுபடுவோர், கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படுவர்.

வட்ட வழங்கல் மற்றும் உதவி கமிஷனர் அலுவலகங்களில், புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டும். தகுதியற்ற மற்றும் இல்லாத நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், குடும்ப அட்டை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

குடும்ப அட்டைகளில் மாற்றம் கோரி வரும் பொது நபர்களுக்கு, அவற்றை விரைந்து செய்து கொடுக்க வேண்டும். போலி குடும்ப அட்டைகளை அலுவலர்கள் கண்டுபிடித்து, உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை மக்களுக்காக அரசு இலவசமாக வழங்கும் பொது வினியோகத் திட்ட அரிசியை முறைகேடாக வாங்கி பயன்படுத்தும் சிறு ஓட்டல்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு புத்திசந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us