Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 2வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 2வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 2வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 2வது நாளாக பொதுமக்கள் போராட்டம்

ADDED : செப் 13, 2011 12:21 AM


Google News

வள்ளியூர் : இடிந்தகரையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தனர்.

உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ், சுவாமிதோப்பு பாலபிராஜாபதி அடிகளார் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணுஉலையிலிருந்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடங்கப்படுவதற்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. இந்த சோதனைக்கு பிறகு மின் உற்பத்தி தொடங்கும் போது பொதுமக்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், அணுஉலையினால் ஆபத்து ஏற்படுமென கருதி அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடன்குளம் மற்றும் சுற்றுக்கிராம பகுதி மக்கள் பல்வேறு விதமாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.



எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது காவல்துறை மறைமுகமாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தி வருவதாகவும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தியும் அணுஉலை எதிர்பாளர்கள் சார்பில் இடிந்தகரையில் புனித லூர்து அன்னை ஆலயம் முன் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மாலையில் உண்ணாவிரதம் முடியும் நிலையில் 4 கத்தோலிக்க அருட்தந்தையர்கள், 3 கன்னியாஸ்திரிகள், 4 மாற்றுத்திறனாளிகள் உட்பட 127 பேர் சாகும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதனால் போராட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் பேசியதாவது:-



''உலக நாடுகள் அணுஉலையை மூடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் அணுஉலை திறப்பது தவறு. 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அணுஉலையை மூடுவது கடினம் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். பலகோடி ரூபாய் இழப்பீட்டை பொருட்படுத்தாமல் மனித உயிர்கள் தான் முக்கியம் என்று அணுஉலையை மூட மத்திய, மாநில அரசுகள் எந்தவித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.



சுவாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகள் பேசியதாவது:-



''கூடன்குளத்தில் 1988ம் ஆண்டு அணுமின் நிலையம் அமைக்கும்போது எதிர்ப்பு தெரிவித்தவர்களில் நானும் உண்டு. மக்கள் நலன் காக்க மற்றவைகளை உதறிவிட வேண்டும். அதுபோல மக்கள் நலனுக்கு எதிராக அமைய இருக்கும் அணுமின் நிலையத்தை மூட மத்திய, மாநில அரசுகள் உடனே முன்வர வேண்டும்'' என்றார்.



மதிமுக பொது செயலாளர் வைகோ பேசியதாவது:-



''1988ம் ஆண்டு கூடன்குளம் அணுஉலைக்கு ரஷ்ய நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் போட இருக்கும் நிலையில் பார்லிமென்டில் இரண்டு அவைகளிலிருந்தும் ஒரே ஒரு எதிர்ப்பு குரல் தான் எழுந்தது. அந்த குரல் வைகோவின் குரல் மட்டும்தான். 86ம் ஆண்டு சொர்ணோவில் அணுஉலையில் அணுக்கசிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது விஞ்ஞானத்தில் வல்லரசாக திகழும் ஜப்பான் நாட்டில் புக்கிஷமா அணுஉலையினால் ஏற்பட்ட ஆபத்தை தடுக்க முடியாமல் போய்விட்டது.



இந்தியாவில் தமிழகத்தில் கூடன்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டால் வரும் காலத்தில் தமிழகம் பெரும் அழிவை சந்திக்க நேரிடும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்தியா முழுவதும் சென்று பயன்பெறும். ஆனால் பாதிப்பு ஏற்பட்டால் தமிழகம் மட்டும்தான் அதிகளவில் பாதிப்படைய வேண்டுமென்பது எந்தவிதத்தில் நியாயம் என்று சிந்திக்க வேண்டும். தமிழகத்திற்கு ஆபத்து வடக்கே இருந்து வராது. தெற்கே கூடன்குளத்திலிருந்து தான் வரும். ஜப்பானுக்கு ஆற்றல் அறிவு உண்டு. இருந்தும் புக்கிஷமா அணுஉலையில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லை.



அதனால் தான் இனிமேல் அணுமின் நிலையம் வேண்டாம் என்று முடிவெடுத்து அணுஉலைகளை மூடிவிட்டனர். இதேபோன்று ஜெர்மன், இத்தாலி, ஐரோப்பா கண்டம் முழுவதும் அணுஉலையை மூடி வருகின்றனர். கல்பாக்கத்தில் மேலும் 4 அணுஉலைகளும், கூடன்குளத்தில் மேலும் 4 அணுஉலைகளும் அமைக்கப்படுமென அறிவித்துள்ளனர். இது கண்டனத்திற்குரியதாகும். வரும்முன் காக்க, தமிழகத்தை பாதுகாக்க போராடி வருகின்றனர்.



உயிர் வாழ உரிமை கொடுங்கள் என்று சட்டத்தில் இடம் உள்ளது. அந்த உயிர்களை அழிக்க அணுஉலைகளை ஏற்படுத்தாதீர்கள். அணுமின்நிலையங்கள் தமிழகத்தில் இருக்க கூடாது. கடல் வளம் பாதுகாத்து மனித நலன் பேண எந்தவித அரசியல் நோக்கமின்றி மீனவ பொதுமக்கள் போராடுகின்றனர். அநீதியை எதிர்த்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர வேண்டும்'' என்றார்.



கூட்டத்தில் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பாமக மாநில பொருளாளர் வீனஸ்வீரஅரசு, மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் ரைமன்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவசிராஜன், ஜோசப் சந்திரன், கென்னடி, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அலெக்ஸ், திருச்சிற்றம்பலம், சற்குணராஜ், அணுஉலை எதிர்ப்பாளர்கள் உதயகுமார், அன்டன்கோமஸ், மாவட்ட கவுன்சிலர் சாண்டல் முத்துராஜ், யூனியன் கவுன்சிலர்கள் நடராஜன், கலா உட்பட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர், தமிழர் களம் அமைப்பினர், தமிழ்நாடு கடலோர மக்கள் கூட்டமைப்பினர், தூத்துக்குடி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுரிமை மக்கள் இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரம் பொதுமக்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் திரண்டு இருந்தனர்.



மீனவர்கள் ஸ்டிரைக் : உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் இரண்டாவது நாளாக நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அணுஉலை எதிர்ப்பாளர்கள் கடலோர கிராம பகுதிகளை சேர்ந்த தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. இதனால் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.



கடையடைப்பு : தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.



கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நடந்து வரும் தீவிர உண்ணாவிரத போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் மேதாபட்கர், இயக்குநர் சீமான் போன்றோர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அணுஉலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தினால் மாவட்ட நிர்வாகமும் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us