Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அடுத்தடுத்து அரசின் நெருக்கடியால் ஹசாரே கோபம்

அடுத்தடுத்து அரசின் நெருக்கடியால் ஹசாரே கோபம்

அடுத்தடுத்து அரசின் நெருக்கடியால் ஹசாரே கோபம்

அடுத்தடுத்து அரசின் நெருக்கடியால் ஹசாரே கோபம்

UPDATED : செப் 06, 2011 06:48 AMADDED : செப் 04, 2011 11:36 PM


Google News
Latest Tamil News

ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): உரிமை மீறல் நோட்டீஸ், வருமான வரித்துறை நோட்டீஸ் என, தனது ஆதரவாளர்களுக்கு, மத்திய அரசு, அடுத்தடுத்து நெருக்கடி கொடுத்து வருவதால், காந்தியவாதி அன்னா ஹசாரே கோபம் அடைந்துள்ளார்.

'ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை, சீண்டாதீர்கள். அனாவசியமாக மோதினால், போராட்டம் வெடிக்கும்'என, அவர் எச்சரித்துள்ளார்.





ஊழலுக்கு எதிராக, காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். ஜன் லோக்பாலை அரசு ஏற்கும் வகையில் முதல்கட்ட வெற்றி பெற்றார். இவரது போராட்டம் சுமுகமாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்கள் மீது, மத்திய அரசின் நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, பிரபல சட்ட நிபுணர் பிரசாந்த் பூஷன் ஆகியோர், எம்.பி.,க்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, பார்லிமென்டில் இருந்து, உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



ஊழலுக்கு எதிராக, ராம்லீலா மைதானத்தில் பேசிய, பாலிவுட் நடிகர் ஓம் புரிக்கும், உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஹசாரே குழுவைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமான வரி நிலுவைத் தொகையான 9.27 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என, அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஹசாரே ஆதரவாளர்களை பழிவாங்கும் வகையில், மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளாக, விமர்சனம் எழுந்துள்ளது. அதே சமயம், மத்திய அமைச்சர் கபில் சிபலை தேர்தலில் கிரண் பேடி எதிர்கொள்ள நேரிட்டால், சிபல் தோற்பர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கெஜ்ரிவால் எதிர்த்து போட்டியிட்டால், கெஜ்ரிவால் வெற்றி உறுதி என்று கணிப்புகள் வெளியிடும் அளவுக்கு, அவரது முயற்சிகளுக்கு அதிக ஆதரவு எழுந்து வருகிறது.



ஹசாரே கோபம்: மத்திய அரசின் நடவடிக்கைகளால், அன்னா ஹசாரே கடும் கோபம் அடைந்துள்ளார்.



இதுகுறித்து, தன் சொந்த ஊரான, மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தியில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:ஊழலுக்கு எதிராக போராடியவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களுக்கு தவறான தகவல்களை தெரிவிப்பதற்கு பதிலாக, மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு, அரசு முயற்சிக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால், வருவாய்த் துறையில் இருந்து, ராஜினாமா செய்து விட்டு, சமூக நலனுக்காக போராட்டம் நடத்தி வருகிறார்.



அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த நோட்டீஸ் அனுப்பியதன் நோக்கம் என்னவென்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். ஊழலுக்கு எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள், நாட்டில் மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விடும். சமூகத்தில் அமைதியின்மை உருவாகி, போராட்டம் வெடிக்கும். பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, இந்தியாவை 'சூப்பர் பவர்' நாடாக மாற்றுவதற்கு, அரசு முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு ஹசாரே கூறினார்.



'பாதுகாப்பு வேண்டாம்' : ஹசாரேயின் பாதுகாப்பு கருதி, அவருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்க, மகாராஷ்டிர மாநில அரசு முன்வந்தது. இந்த பாதுகாப்பை ஏற்க, ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:பகத் சிங், ராஜகுரு போன்ற சுதந்திர போராட்டவீரர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. அதுபோல், எனக்கும் எந்த பாதுகாப்பும் தேவையில்லை. மாரடைப்பு காரணமாக கூட, சிலர் இறக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து என்ன பயன்? எனக்கான பாதுகாப்பு குறித்து, யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும். இதுகுறித்து மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு ஹசாரே கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us