UPDATED : அக் 12, 2011 04:55 AM
ADDED : அக் 11, 2011 11:07 PM

மதுரையில் மேயர் மற்றும் கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்., மாஜி மத்தியமைச்சர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாநகர், அய்யர்பங்களா போன்ற பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆவேசமாக பேசிய அவரது பேச்சை ரோட்டில் சென்றவர்களை நின்று கேட்க வைத்தது. தனது வழக்கமான பாணியில் மதுரை நிகழ்வுகளை சுட்டி காட்டி தி.மு.க.,வை வம்புக்கு இழுக்கவும் தவறவில்லை. எதிர்கால கூட்டணி கனவை மனதில் வைத்து கொண்டு அ.தி.மு.க., தே.மு.தி.க., போன்றவைகளை சாடுவதை தவிர்த்து விட்டார். பேச்சில் ஹை லைட்டாக அமைந்தது அவரது இறுதி பேச்சு தான் இனி வருவது...''உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலர காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும். உங்களை எல்லாம் மீண்டும் மேயர் மற்றும் கவுன்சிலர்களுடன் வந்து வெற்றி விழாவில் சந்திக்கிறேன்..'' என முடித்தார். தலைவர் எந்த நம்பிக்'கை'யில் பேசுகிறார் என தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்ப, 'அரசியலில் இதெல்லாம் சகஜம் தானப்பா' எனஅடுத்தவர் கமென்ட் அடித்தார்.


