ADDED : ஆக 30, 2011 12:50 AM
அவிநாசி : உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பங்கேற்பது குறித்த சிறப்பு முகாம், அவிநாசியில் நடந்தது.அவிநாசியில் இயங்கி வரும் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில், உள்ளாட்சி தேர்தல்-2011ல் பெண்கள் பங்கேற்பு குறித்த முகாம் நடந்தது.
மைய ஒருங்கிணைப்பாளர் நயினான், பாஸ்கரன், ஆறுச்சாமி, சரவணக்குமார் ஆகியோர் பேசினர். கள பயிற்சியாளர்கள் ஓதியப்பன், பாண்டிசெல்வி, முருகேசன், கல்பனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.முகாமில் பங்கேற்ற பெண்கள் பேசியதாவது:பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக பங்கேற்று, சமுதாயத்துக்காக பணியாற்றுவோம். எங்களது கிராமத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களை, தேர்தலில் நிறுத்தி, அவர்களது வெற்றிக்காக உழைப்போம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்றில்லாமல், அனைத்து இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம், என்றனர்.சமூக கல்வி முன்னேற்ற மைய ஒருங்கிணைப்பாளர் நயினான் கூறுகையில், ''முகாமில் பங்கேற்ற பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளனர். கிராம பெண்கள், தங்களது கிராமத்துக்கு தேவையான வசதிகளை செய்வதற்காகவே போட்டியிடுவதாக தெரிவித்தனர். ''குறிப்பாக, தங்களது கணவரின் தலையீடு இல்லாமல் பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தனர். வரும் தேர்தலில் அவிநாசி ஒன்றியத்தை பொறுத்தவரை இட ஒதுக்கீடு இல்லாத இடங்களிலும் கூட, பெண்கள் போட்டியிட முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.அவிநாசி, கருவலூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நடுவச்சேரி மற்றும் பழங்கரை பகுதிகளை சேர்ந்த 35 கிராமங்களுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் உள்ளாட்சி தேர்தல் - 2011 என்ற தலைப்பில் தேர்தல் முறை குறித்த கையேடு வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான கண்காட்சியும் நடத்தப்பட்டது


