இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்குகள்: ஐகோர்ட் உத்தரவு
இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்குகள்: ஐகோர்ட் உத்தரவு
இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு கோரி வழக்குகள்: ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 26, 2011 10:06 PM
மதுரை: இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, துப்பாக்கி லைசென்ஸ் வழங்க கோரிய வழக்குகளை, இறுதி விசாரணைக்காக அக்., 11ல் பட்டியலிட மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை மனித உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகி வாஞ்சிநாதன் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ''இலங்கை கடற்படையினரால், அப்பாவி இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
சில மாதங்களில் மட்டும் 500 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்களுக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். மேலூர் எட்டிமங்கலம் வக்கீல் பி.ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ''இந்திய மீனவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்திய மீனவர்கள் தொழில் செய்ய ஏதுவாக, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என கோரினார். இவ்வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி பட்டியலிடும்படி, மனுதாரர் தரப்பில் நேற்று ஐகோர்ட் கிளையில் முதல் பெஞ்சில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, இறுதி விசாரணைக்காக இவ்வழக்குகளை அக்., 11ல் பட்டியலிட, பதிவு துறைக்கு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் பெஞ்ச் உத்தரவிட்டது.


