ADDED : ஆக 17, 2011 02:44 AM
.மதுரை : மதுரை சுப்பிரமணியபுரம் அருகே எம்.கே.புரம் மண்ணெண்ணெய் வினியோக
மையத்தில், மண்ணெண்ணெய் டேங்கில் மழை தண்ணீர் கலந்ததால், விற்பனை
பாதிக்கப்பட்டது. 'சிவாஜி கூட்டுறவு பண்டகசாலை' வினியோக மையத்தில்,
மண்ணிற்குள் பதிக்கப்பட்டுள்ள 21 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கின்
சேதமடைந்த மூடி வழியாக தண்ணீர் டேங்கிற்குள் புகுந்தது. டேங்கில் 13 ஆயிரம்
லிட்டர் மண்ணெண்ணெய் ஸ்டாக் இருந்தது. நேற்று முன்தினம் தேங்கிய மழை
தண்ணீர், நேற்று காலையில் முழுமையாக வடிந்துவிட்டது. இதனால் வழக்கம் போல்
மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. அப்போது கேன்களின் கீழ் பகுதியில் தண்ணீரும்
மேல் பகுதியில் மண்ணெண்ணெயும் இருப்பதை பார்த்து பொதுமக்கள்
அதிர்ச்சியடைந்தனர்.இது தொடர்பாக மைய மேலாளர் வெங்கடாசலபதியிடம்
தெரிவித்தனர். டேங்கில் மழைதண்ணீர் புகுந்திருப்பதை உறுதிசெய்த பின்னர்,
அவற்றை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை
பம்ப் செய்து வெளியேற்றியபின், பகல் 2 மணிக்கு பின் மண்ணெண்ணெய் வினியோகம்
நடந்தது.இந்த மையத்தில் வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் மற்றும்
சுற்றுப்பகுதிகளில் உள்ள 12 ரேஷன்கடைகளின் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய்
வினியோகம் செய்யப்படுகிறது. தாழ்வான பகுதி ஆனதால் இங்கு, சிறு
மழைபெய்தாலும் தண்ணீர் தேங்கிவிடுகிறது. சுவர் இல்லாமல், மழைநீர் வடிகால்
ஓடைகள் சரிவர இல்லாததால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
72 மணி நேரம் சைக்கிள் ஓட்டும் பிரகாஷ்
'தரையில் கால் படாமல், உண்ணாமல், உறங்காமல் 72 மணி நேரமும் சைக்கிள்
ஓட்டுகிறார்' என்று மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் முன் மேடை அமைத்து
'நான்-ஸ்டாப்பாக' அறிவித்துக் கொண்டிருந்தனர் தமிழ்நாடு முத்தமிழ் மேடை
கலைநிகழ்ச்சி கலைஞர்கள்.அந்த வழியே சென்ற நாம், இதை கேட்காமல் நகர,
சைக்கிளின் 'அண்ணனான' நம்ம டூவீலர் 'மக்கராகி' நின்றது; நகர மறுத்து
அடம்பிடித்தது. வேறு வழியின்றி கலைஞர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
''ஆடல், பாடல் தொழிலை நம்பி 40 ஆயிரம் கலைஞர்கள் உள்ளனர். இத்தொழிலுக்கு
போலீசார் அனுமதி தரமறுப்பதால், நிகழ்ச்சி நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
இதை ரத்து செய்வது உட்பட எங்களது 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, 72 மணி நேரம்
சைக்கிள் ஓட்டி அரசின் கவனத்தை ஈர்க்க உள்ளோம்,'' என்றனர்.சாதனையாளர்
பிரகாஷ், ''25 ஆண்டுகளாக சைக்கிள் ஓட்டி சாதனை படைத்து வருகிறேன். இந்த
மூன்று நாட்களும் தண்ணீர், ஜூஸ் மட்டுமே குடிக்க உள்ளேன்,'' என்றார்.
நமது சிறப்பு நிருபர்


