ADDED : ஆக 19, 2011 02:23 AM
சேலம்: சேலம் பிருந்தாவன் சாலையில், ஆந்திரா வங்கியின் புதிய கிளையை,
நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி தலைவர் சாரதி திறந்து வைத்தார்.
ஆந்திரா வங்கியின் முதன்மை பொது மேலாளர் வைத்தியநாதன், சென்னை மண்டல
ஆந்திரா வங்கி பொது மேலாளர் பாலசுப்ரமண்யம், நரசுஸ் ஸ்பின்னிங் மில் அதிபர்
ராமானுஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியாவில், ஆந்திரா வங்கி 1,645
கிளைகளுடன் இயங்கி வருகிறது. தமிழகத்தில், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட
ஆந்திரா வங்கியின் கிளைகள், 79 உள்ளன. இதில், சேலம் மாநகரத்தில் இரண்டாவது
புதிய கிளையாக பிருந்தாவன் சாலையில் நேற்று ஆந்திரா வங்கி துவங்கப்பட்டது.
விழாவில், ஆந்திரா வங்கியின் முதன்மை பொது மேலாளர் வைத்தியநாதன்
பேசியதாவது: ஆந்திரா வங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில்
வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. ஆந்திரா வங்கியின் ஸ்தாபகர்
பட்டாபி சீதாராமன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு லட்சம் ரூபாய் நிதி
திரட்டி, வங்கியை துவங்கினர். வங்கியின் ஸ்தாபகர் பட்டாபி சீதாராமன்,
மகாத்மா காந்தியடிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டு இருந்தவர். 'ரிசர்வ்
வங்கி'யின் முன்னோடியாக 'இம்பிரியல் பாங்க்' இருந்த காலக்கட்டத்தில்,
ஒருசில வங்கிகள் மட்டுமே இயங்கி வந்தன. ஆந்திரா வங்கி,
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை மூலம் திருப்தி ஏற்படுத்துவதை
நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. ஆந்திரா வங்கியில் நீண்ட காலமாக
வங்கி கணக்கை தொடர்ந்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதிகளவு உள்ளனர்.
இந்தியாவில், ஆந்திரா வங்கி, 1,645 கிளைகளுடன், இரண்டரை கோடி
வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஆந்திராவை தவிர பிற மாநிலங்களில்
மட்டும் ஆந்திரா வங்கிக்கு, 600 கிளைகள் உள்ளன. டில்லி, மும்பையில், 40
கிளைகளும், பஞ்சாப்பில், 60 கிளைகளும், ஒரிசாவில், 20 கிளைகளும் உள்ளன.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெற்ற வங்கியாக திகழும் ஆந்திரா வங்கியில்
ஆண்டுக்கு, ஒரு லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று
வருகிறது. ஆந்திரா வங்கியில் புதியதாக வாரத்துக்கு, 40 ஆயிரம்
வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர்.
ஆந்திரா வங்கி, 2011ல் இரண்டாம் காலாண்டு வரை, 386 கோடி ரூபாய் லாபம்
ஈட்டியுள்ளது. வங்கியின் வளர்ச்சி விகிதம், 20.63 சதவீதமாக உள்ளது.
வங்கியின் அபார வளர்ச்சிக்கு, நம்பிக்கை உள்ள வாடிக்கையாளர்களும்,
அவர்களுக்கு வங்கி மூலம் ஆற்றும் சேவையே காரணமாக உள்ளது. வங்கி மூலம் சிறு
தொழில், சில்லரை வியாபாரம், விவசாயம் உள்ளிட்டவைக்கு அதிக கடனுதவி
அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். ஆந்திரா வங்கி ஊழியர்கள்
சங்கத் தலைவர் சுந்தரராமன் நன்றி கூறினார். வங்கி ஊழியர்கள் சீதாராமய்யா,
ஜெகஜோதி, பாஸ்கர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


