PUBLISHED ON : செப் 09, 2011 12:00 AM

பாராட்டு மழையில் நனையும் பிரணாப்!
காங்கிரஸ் கட்சியினர், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, புகழ்ந்து தள்ளுகின்றனர்.
'பிரணாப், எங்கள் கட்சிக்கு கிடைத்ததற்கு, நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்'என, பாராட்டு மழை பொழிகின்றனர். அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின் போது, பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதற்கு, கபில் சிபல், சிதம்பரம் போன்ற மத்திய அமைச்சர்களை தான், பிரதமர் மன்மோகன் சிங் நம்பியிருந்தார். இந்த இரண்டு அமைச்சர்களின் ஆலோசனைகளைத் தான், பிரதமர் கேட்டார். அப்போது அவர்கள்,'இந்த உண்ணாவிரத போராட்டம், ஆறு நாட்களுக்கு கூட நீடிக்காது. அப்படி நீடித்தால், உண்ணாவிரதம் இருப்போரை, மைதானத்தில் இருந்து வெளியேற்றி விடுவோம்'என, பிரதமரிடம், உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாயின. ஆனால், உண்ணாவிரதம் ஆறு நாட்களை கடந்ததுடன் மட்டுமல்லாமல், எம்.பி.,க்களின் வீடுகளின் முன், ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு, தீவிரமடைந்து விட்டது. நொந்துபோன பிரதமர், 'இனிமேல், ரூட்டை மாற்ற வேண்டியது தான்'என, முடிவெடுத்தார். அப்போது தான், மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜியின் நினைப்பு, பிரதமருக்கு வந்தது. உடனடியாக, அவரைத் தொடர்பு கொண்டு, 'அன்னா ஹசாரே பிரச்னையை தீர்ப்பதற்கு ஏதாவது செய்யுங்கள்'என, பிரணாபிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பிரதமரின் உத்தரவை ஏற்று, பிரணாப் முகர்ஜியும், விறு, விறு என, களத்தில் இறங்கி, ஹசாரே ஆதரவாளர்களுடன் பேச்சு நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது சொல்லுங்கள். பிரணாப் முகர்ஜியை, காங்கிரஸ்காரர்கள் பாராட்டத் தானே செய்வர்.


