/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி நகராட்சியில் 65 ஓட்டுச்சாவடிகள் தயார்பொள்ளாச்சி நகராட்சியில் 65 ஓட்டுச்சாவடிகள் தயார்
பொள்ளாச்சி நகராட்சியில் 65 ஓட்டுச்சாவடிகள் தயார்
பொள்ளாச்சி நகராட்சியில் 65 ஓட்டுச்சாவடிகள் தயார்
பொள்ளாச்சி நகராட்சியில் 65 ஓட்டுச்சாவடிகள் தயார்
ADDED : செப் 08, 2011 10:30 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு 36
வார்டுகளுக்கு 65 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளதற்கு கவுன்சில்
அனுமதி பெறப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் தலைவர்
ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு
பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 65 ஓட்டுச்சாவடிகள்
கண்டறியப்பட்டு, வரைவு ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டுள்ளது பார்வைக்கு
வைக்கப்பட்டது.நகராட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்படும் உத்தேச செலவினம்
8 லட்சம் ரூபாய்க்கும், உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி பட்டியல்,
வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய ஏற்படும் செலவு தொகை 15,500
ரூபாய்க்கு கவுன்சில் அனுமதி பெறப்பட்டது. கூட்டத்தில், கவுன்சிலர்கள்
பேசுகையில், 'ஓட்டுச்சாவடியில் குடிநீர், மின்வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
வாக்காளர்கள் எளிதாக சென்று வரும் வகையில் ஓட்டுச்சாவடிகளை அமைக்க
வேண்டும். விடுபட்டுள்ள வாக்காளர்களின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்றனர். கமிஷனர் பூங்கொடி அருமைக்கண் பேசியதாவது: பொள்ளாச்சி
நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளுக்கு 65 ஓட்டுச்சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன. ஒருசில வார்டுகளுக்கு ஒரே ஒரு ஓட்டுச்சாவடி மட்டும்
அமைக்கப்பட்டுள்ளது. மற்ற வார்டுகளுக்கு இரண்டு அல்லது மூன்று ஓட்டுச்சவாடி
வரையிலும் அமைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பாகம் வாரியாக
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது, வார்டு வாரியாக வாக்காளர்
பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பிரிக்கும் பணி
முடிந்ததும் வெளியிடப்படும். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு பொள்ளாச்சியில்
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது, என்றார்.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
கூட்டத்திலும் இதே கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. நகராட்சி கமிஷனர்
நிருபர்களிடம் கூறுகையில், ''பொள்ளாச்சி நகராட்சி நான்கு மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 9 வார்டுகள்
சேர்க்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்
பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுச்சாவடி பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்கு மக்கள் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு
மேல் செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் கமிஷன்
அறிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அனைத்து அடிப்படை பணிகளும் நிறைவு
செய்யப்படும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு, தேர்தலுக்கான பணிகள்
துவங்கப்படும்'' என்றார்.


