ஜனாதிபதி ஆட்சிக்கு அவசியம் இல்லை : குலாம்நபி ஆசாத் தகவல்
ஜனாதிபதி ஆட்சிக்கு அவசியம் இல்லை : குலாம்நபி ஆசாத் தகவல்
ஜனாதிபதி ஆட்சிக்கு அவசியம் இல்லை : குலாம்நபி ஆசாத் தகவல்
ADDED : அக் 08, 2011 10:57 PM

புதுடில்லி: ' ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறினார். தெலுங்கானா விவகாரத்தால், ஆந்திராவில் இக்கட்டான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், மத்திய சுகாதார அமைச்சரும், ஆந்திர மாநிலத்துக்கான காங்., மேலிட பொறுப்பாளருமான குலாம்நபி ஆசாத், இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறுகையில்,'ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்படும்' என்றார்.
ஆந்திர கவர்னர் நரசிம்மன் கூறுகையில்,' ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை. பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, அங்கு ஆட்சியில் உள்ளது. அந்த அரசு தொடர்ந்து, தன் கடமையை நிறைவேற்றும்' என்றார்.
ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறுகையில்,'ஜனாதிபதி ஆட்சியை எதற்காக அமல்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, சட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த சூழ்நிலை, தற்போது ஆந்திராவில் இல்லை. ஜனாதிபதி ஆட்சி என, கூறுவது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. தெலுங்கானா பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்' என்றார்.


