Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கோடிக்கணக்கில் முறைகேடு : வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கோடிக்கணக்கில் முறைகேடு : வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கோடிக்கணக்கில் முறைகேடு : வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கோடிக்கணக்கில் முறைகேடு : வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

ADDED : ஆக 26, 2011 09:47 PM


Google News
Latest Tamil News

சென்னை : ''வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான மனைகளை, முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட தி.மு.க.,வினர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு முறைகேடாக பெற்றுள்ளனர்,'' என்று சட்டசபையில் அமைச்சர் வைத்தியலிங்கம் குற்றம் சாட்டினார்.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு, அமைச்சர் வைத்தியலிங்கம் அளித்த பதில்: அண்ணா நகரில் 21 கிரவுண்ட் 186 சதுர அடி நிலத்தை, 3 கோடியே 25 லட்சத்துக்கு ரமேஷ் சவுத்ரி ஏலம் எடுத்தார்.

ஏலத்தை வாரியம் ரத்து செய்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில், 4 கோடியே 16 லட்சம் ரூபாய்க்கு ரமேசுக்கு அந்நிலம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இவர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் பெயரில் மாற்றம் செய்து கொடுத்துள்ளார். இதனால், வாரியத்திற்கு 15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருவான்மியூரில் அப்பழுக்கற்ற அரசு ஊழியர் என்று ஜாபர் சேட்டுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீண்டும் அந்த மனை ரத்து செய்யப்பட்டு, 2009ம் ஆண்டு, அவருடைய மனைவி பர்வீன் பெயரில் சமூக சேவகர் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனைக்கான முழுத் தொகையும் செலுத்திய பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வந்து விடும் என்ற பயத்தில் வீட்டு மனையை வாரியத்திடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என, வாரியம் தெரிவித்துவிட்டது.

லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், கோவையில் வாரியத்திற்குச் சொந்தமான போலி ஆவணம் மூலம் விற்கப்பட்ட சொத்தை வாங்கியுள்ளார். இதில், அரசிற்கு 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எஸ்ஸார் கோபி, பொட்டு சுரேஷ் உட்பட ஒன்பது பேருக்கு, சமூக சேவகர் என்ற அடிப்படையில் அழகிரி சிபாரிசில் மதுரையில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்தாதவர்கள்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சிகா அறக்கட்டளை மூலம் 61 ஆயிரத்து 600 சதுர அடி நிலத்தை, சதுர அடிக்கு 100 ரூபாய் என்ற மதிப்பில் வாங்கியுள்ளார். 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காட்பாடி கூட்டுறவு வசதி சங்கத்தின் ஏலத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், தனது மனைவி சாந்தகுமாரி, மகன் கதிரானந்த், மருமகள் சங்கீதா ஆகியோரின் பெயரில் 15 ஆயிரத்து 600 சதுர அடியை 78 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.

நடவடிக்கை வருமோ என்ற பயத்தில், ஏலம் எடுத்த அந்த நிலத்தை திருப்பி ஒப்படைத்து பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால், அவரது தம்பி துரைசிங்காரம், மனைவி முல்லைக்கொடி ஆகியோர் 22 ஆயிரம் சதுர அடி நிலத்தை, 1 கோடியே 14 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் நிலத்தை திருப்பித் தருவதாகக் கூறி, இதுவரையில் திருப்பி ஒப்படைக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

கருணாநிதி வீட்டு வேலையாட்களும் வீட்டு மனையை விட்டு வைக்கவில்லை : வீட்டு வசதித் துறை மீதான மானியக் கோரிக்கைக்கு அமைச்சர் வைத்தியலிங்கம் அளித்த பதில்: கருணாநிதி வீட்டில் வேலை செய்யும் எட்டு பேருக்கு, சமூக சேவகர் என்ற அடிப்படையில் திருவான்மியூரில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கீடு பெற்று 15 சதவீதம் முன்பணம் செலுத்திய சிலரின் ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, இவர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதிக்கு, உயர் வருவாய் பிரிவு மனை 60 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த 2007ம் ஆண்டில் சமூக சேவகர் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரிய சட்டப்படி தமிழகம் முழுவதும் தனக்கோ, மனைவிக்கோ, தனது குழந்தைக்கோ வீடோ, வீட்டு மனைகளோ தமிழகத்திலோ, பிற மாநிலங்களிலோ இருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், தயாநிதி முறைகேடாக ஒதுக்கீடு பெற்றுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us