நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா ஏற்பு : லோக்சபாவில் தீர்மானம் நடக்குமா?
நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா ஏற்பு : லோக்சபாவில் தீர்மானம் நடக்குமா?
நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா ஏற்பு : லோக்சபாவில் தீர்மானம் நடக்குமா?

கோல்கட்டா : நிதி முறைகேட்டில் ஈடுபட்ட, நீதிபதி சவுமித்ரா சென், தன் கைப்பட எழுதி கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தை, மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, ராஜ்யசபாவில் அவருக்கு எதிராக, சமீபத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேறியது. அடுத்த கட்டமாக, லோக்சபாவில் கண்டனத் தீர்மானம் கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுத்தது.அதன்படி, நாளை (செப்., 5) இந்தத் தீர்மானம் லோக்சபாவில் கொண்டுவரப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. விதிமுறைப்படி, லோக்சபாவிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சவுமித்ரா சென், பதவி நீக்கம் செய்யப்படுவார்.இந்நிலையில், அதற்கு முன்பாகவே, தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை, ஜனாதிபதி பிரதிபாவுக்கு, 'பேக்ஸ்' மூலம் சவுமித்ரா சென் அனுப்பி வைத்தார். ஆனால், நீதிபதி சவுமித்ரா சென்னின் ராஜினாமா கடிதம் முறைப்படி எழுதப்படவில்லை எனக் கூறி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அதனை நிராகரித்தார். இதையடுத்து, சவுமித்ரா சென் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் பிரதிபாவை நேற்று நேரில் சந்தித்து, அவரது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.
இது குறித்து, சவுமித்ரா சென்னின் வழக்கறிஞர் சுபாஷ் பட்டாச்சார்யா கூறுகையில், ''சென், தன் கைப்பட எழுதி கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை, வழக்கறிஞர் ஒருவர் நேற்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து சமர்ப்பித்தார். கடிதத்தை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பரிசீலித்து வருகிறார். கடிதம் ஏற்கப்பட்டால், லோக்சபாவில் இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அப்படியே லோக்சபாவில் விவாதம் நடந்தாலும், சவுமித்ரா சென் அதில் கலந்துகொள்ள மாட்டார்'' என்றார்.
இதையடுத்து, லோக்சபாவில் சவுமித்ரா சென்னுக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விதிகளின்படி, புகாருக்கு உள்ளான நீதிபதி, தானாகவே பதவி விலகி விட்டால், அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் கொண்டு வர முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் புது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்ட நிபுணர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


