/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முறையற்ற குடிநீர் இணைப்புக்குமீட்டர் பொருத்த முடிவுமுறையற்ற குடிநீர் இணைப்புக்குமீட்டர் பொருத்த முடிவு
முறையற்ற குடிநீர் இணைப்புக்குமீட்டர் பொருத்த முடிவு
முறையற்ற குடிநீர் இணைப்புக்குமீட்டர் பொருத்த முடிவு
முறையற்ற குடிநீர் இணைப்புக்குமீட்டர் பொருத்த முடிவு
ADDED : செப் 15, 2011 11:55 PM
பொள்ளாச்சி:கிணத்துக்கடவு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான
குழாயில் முறைகேடாக இணைப்பு எடுத்து பயன்படுத்திய ஊராட்சி நிர்வாகம் மீது
நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதிக்காமல்
இருக்க முறையற்ற குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொருத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு குடிநீர் கொண்டு
செல்லும் பிரதான குழாயில் தண்ணீரின் அளவு குறைந்ததால், குடிநீர் வடிகால்
வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ஆச்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
அண்ணாநகர் ரோட்டில் பிரதான குடிநீர் குழாயில் முறைகேடாக இணைப்பு
எடுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடந்த 5ம் தேதி போலீஸ்
பாதுகாப்புடன் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழி தோண்டி பிரதான
குழாயில், நேரடியாக இணைப்பு எடுத்து தண்ணீர் திருடுவதை உறுதி
செய்தனர்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை தடுக்க முடியாததால்,
ஆச்சிபட்டி ஊராட்சி நிர்வாகம் மக்களுடன் சென்று சப்-கலெக்டரை சந்தித்து
முறையிட்டது.
அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கும் தண்ணீர்
தேவைக்கு ஏற்ப கிடைக்காததால், கிணத்துக்கடவுக்கு செல்லும் குழாயில்
அனுமதியின்றி இணைப்பு எடுத்தோம். தற்போது, அந்த இணைப்பு மூலம் தமிழ்மணி
நகர், கமலமுத்து நகர், ஆறுமுகம் நகர், அண்ணாநகர், முருகன் லே-அவுட்
பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் குடிநீர் தேவை பூர்த்தி
செய்யப்படுகிறது. இந்த குடிநீர் இணைப்பை துண்டித்தால் மக்கள்
பாதிப்படைவார்கள் என்று ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது.ஆனால்,
'கிணத்துக்கடவுக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் நேரடி இணைப்பு
எடுத்ததால் வினாடிக்கு 150 லிட்டர் தண்ணீர் வீதம், தினமும் 16 - 18 மணி
நேரம் குடிநீர் எடுக்கப்படுகிறது.இதனால், திட்டத்தில் பயன்பெறும்
கிணத்துக்கடவு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை' என்று
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இந்த விவகாரத்தில்
இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வேறு பகுதிக்கு செல்லும்
குடிநீர் இணைப்பில் முறைகேடாக இணைப்பு எடுத்து மக்களுக்கு குடிநீர்
வினியோகம் செய்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடிவு
செய்யப்பட்டது.கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஆச்சிபட்டிக்கு குடிநீர்
வழங்கும் 295 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்,
ஊராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
கிணத்துக்கடவு லைனில் முறைகேடாக எடுத்த இணைப்பை துண்டித்தால் மக்கள்
பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு
சப்-கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.அதனால், கிணத்துக்கடவு லைனில் முறைகேடாக
எடுத்த இணைப்பில் மீட்டர் பொருத்தவும், நிமிடத்திற்கு 30 லிட்டர் தண்ணீர்
வீதம் 16 மணி நேரத்திற்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
ஊராட்சிக்கு தினமும் அதிகபட்சமாக 40 ஆயிரம் லிட்டர் குடிநீர்
கிடைக்கும்.இதற்காக ஊராட்சி நிர்வாகத்திடம் தீர்மானம் நிறைவேற்ற வழங்குமாறு
அறிவுறுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானது. பொள்ளாச்சி
புறநகர் பகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டம் அமலுக்கு
வந்ததும், தற்போது வழங்கும் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள்
தெரிவித்தனர்.


