Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்

சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்

சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்

சென்னை நகரில் குற்றங்களின் எண்ணிக்கை "ஈ-பீட்' முறையை செயல்படுத்தினால்... குறையும்

ADDED : செப் 04, 2011 09:35 PM


Google News

சென்னை : சென்னை நகரில், போலீசாரின் இரவு நேர ரோந்தை கண்காணிக்க கொண்டு வரப்பட்ட, 'ஈ-பீட்' முறை, பல ஸ்டேஷன்களில் நடைமுறையில் இல்லை.

இதற்கென பதிக்கப்பட்ட கருவிகளை பழுது பார்த்து, முழுவீச்சில், 'ஈ-பீட்' முறையை பயன்படுத்தினால், குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். கடந்த, 2008ல், இரவு நேர ரோந்து பணியை, 'ஈ-பீட்' என மாற்றி, போலீசாருக்கு, நவீன, 'பா-டிராக்' கருவிகள் வழங்கப்பட்டன. மொபைலை போலவே தோற்றம் கொண்ட இக்கருவியுடன், ஏற்கனவே, 'புரோகிராம்' செய்யப்பட்ட கையடக்க, 'பிளேட்' ஒன்றும் உள்ளது. இந்த பிளேட், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களின் காவல் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, ஏ.டி.எம்., நகை கடைகள், குடியிருப்புகள் மற்றும் கோவில்கள் என, ரோந்து செல்லக்கூடிய இடங்களில் உள்ள சுவர்களில் பதிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, சுழற்சி முறையில் ரோந்து செல்லும் போலீசார், தங்களுக்கு வழங்கப்பட்ட, 'பா-டிராக்' கருவியை சுவரில், பிளேட் பதிக்கப்பட்ட இடத்தில் வைத்து சிக்னல் தருகின்றனர். உடனே அந்த நேரம், 'பா-டிராக்' கருவியில் பதிவு செய்யப்படுகிறது. ரோந்து முடிந்ததும், பா-டிராக் கருவிகளை, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கம்ப்யூட்டரில் இதற்கென தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் இணைத்து ரோந்து சென்ற நேரத்தை டவுண்லோடு செய்கின்றனர். சிறிது நேரத்தில் பிரின்ட் அவுட் எடுத்து பைல் செய்கின்றனர். இந்த நடைமுறையில் போலீஸ் ஸ்டேஷன்களின் காவல் எல்லைகள் சரியாக கணக்கிடப்பட்டன.

சந்து பொந்து உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த கருவி, சென்னையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் வழங்கப்பட்டன. நாளடைவில், இந்த கருவியின் பயன்பாட்டை போலீசாரே குறைத்து விட்டனர். தற்போது சென்னை போலீஸ் கமிஷனரகம், பெருநகர கமிஷனரகமாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கருவிகள், வடக்கு மண்டலத்தில், 33 ஸ்டேஷன்களுக்கும், மத்திய மண்டலத்தில், 27 ஸ்டேஷன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட ஏனைய மண்டல போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் சேர்த்து, 200 கருவிகள் வழங்கப்படவுள்ளன. இக்கருவிகளை அமைத்து கொடுத்து பராமரிக்கும் பணியை, 'டெக்மேக்' என்னும் நிறுவனம் செய்து வருகிறது. கடந்த மார்ச் 8ம் தேதியுடன் இவர்களின், 'ஏ.எம்.சி.,' எனப்படும் பராமரிப்பு பணி முடிந்து விட்டது. தற்போது புகார் வந்தால் மட்டும் பழுது நீக்கும் பணியை செய்து தருகின்றனர். சென்னையில் குற்றங்களை குறைக்க ரோந்து பணியில் கமிஷனர் திரிபாதி தனி அக்கறை காட்டி வருகிறார். சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், 'ஈ-பீட்' முறை, முழுமையாக கடைபிடிக்கும் பட்சத்தில், குற்ற நடவடிக்கைகள் பெருமளவு குறையும். சென்னையில் முன்பெல்லாம் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார், சரியாக ரோந்து செல்கின்றனரா என தெரிந்து கொள்ள, முக்கிய இடங்களில் வருகைப்பதிவேடு நோட்டுகளை (பாரா நோட்டு) கொடுத்து விடுவர். இந்த நோட்டுப் புத்தகங்கள் குடியிருப்பு வாசிகளிடமும், ஷாப்பிங் மால்களில் உள்ள இரவு நேர காவலாளியிடமும் இருக்கும். ரோந்து செல்லும் போலீசார், இந்த நோட்டுப்புத்தகங்களில் கையெழுத்திட்டு தங்கள் வருகையை பதிவு செய்வர். சில போலீசார் இரவு நேர ரோந்தில் கையெழுத்திடாமல், தங்களுக்கு உகந்த நேரத்திற்கு அதிகாலையில் சென்று மொத்தமாக கையெழுத்திடுவது வழக்கம். இந்த குளறுபடிகளை போக்கவே, 'ஈ- பீட்' முறை அமல்படுத்தப்பட்டது.



அண்ணாநகரில் 'ஓகே' : அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில், மொத்தம், 48 இடங்களில், 'பா-டிராக்' கருவிக்கான பிளேட்டை பதித்தனர். தற்போது, 39 இடங்களில் பிளேட் சேதம் இல்லாமல் இயங்குகிறது. மேலும் சூளைமேடு, வடக்கு கடற்கரை மற்றும் ஒரு சில போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஓரளவு இயங்குகிறது. பா-டிராக் கருவி செயல்பாடு குறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''இக்கருவியை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் திறம்பட கையாண்டு வருகிறோம். ஒன்றிரண்டு இடத்தில் மட்டுமே கட்டுமானப் பணிக்காக, அந்த இடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, புரோகிராம் செய்யப்பட்ட, 'பிளேட்' கள் காணாமல் போய் விட்டன. ''ரோந்து செல்லும் போலீசாருக்கு இந்த பா-டிராக் கருவியுடன், மொபைல் போன் மற்றும் வாக்கி டாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவம் நடந்தால், அதை தடுத்து நிறுத்தி உடனுக்குடன் மொபைல் மூலமாகவும், வாக்கி டாக்கி மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிப்பர்,'' என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us