PUBLISHED ON : ஜூலை 25, 2011 12:00 AM

அசாமில் காட்சி மாறுமா?
அசாம் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர் களில் ஒருவருமான தருண் கோகாய், காங்., மேலிடத்தின் மீது, உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார்.
இவரது தலைமையில் தான், அசாமில், காங்கிரஸ் கட்சி, சட்டசபை தேர்தலில், தொடர்ச் சியாக மூன்று முறை வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்தது. இந்த வெற்றியால், அசாம் மாநிலத்துக்கு, காங்., மேலிடம், மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும் என, தருண் கோகாய் எதிர்பார்த்திருந்தார். அமைச்சரவை மாற்றத்தின்போது, தன் கோரிக்கைகள் நிறைவேறும் என, காத்திருந்தார்.ஆனால், சமீபத்தில் அமைச்சரவை மாற்றி அமைத்தபோது, அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அசாம் சார்பில் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இடம் பெற்றிருந்த ஒரே நபரான, பிஜோய் கிருஷ்ணா காண்டிக்கின் பதவியை பறித்து விட்டனர்.அவருக்கு பதில், அசாம் மாநில பிரதிநிதியாக, வேறு எந்த காங்கிரஸ் எம்.பி.,யும், அமைச்சராக்கப்படவில்லை. கடும் கோபமடைந்த தருண் கோகாய், சக காங்கிரஸ் தலைவர்களிடம், தன் குமுறலை கொட்டித் தீர்த்தார். 'பொறுமையாக இருங்கள்' என, அவர்கள் ஆறுதல் கூறினர். ஆனாலும், அவரின் ஆத்திரம் அடங்கவில்லை.பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியாவை சந்தித்து, தன் அதிருப்தியை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக, நேரம் ஒதுக்கும்படி, அவர்களிடம் கேட்டுள்ளார்.அசாம் அரசியலில் புயல் வீசுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்.


