Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அ.தி.மு.க.,வேட்பாளர் மகனை தி.மு.க., முற்றுகை

அ.தி.மு.க.,வேட்பாளர் மகனை தி.மு.க., முற்றுகை

அ.தி.மு.க.,வேட்பாளர் மகனை தி.மு.க., முற்றுகை

அ.தி.மு.க.,வேட்பாளர் மகனை தி.மு.க., முற்றுகை

ADDED : அக் 12, 2011 01:31 AM


Google News
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பெரியசேமூர் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பணம் கொடுத்ததாக கூறி, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டில் அ.தி.மு.க., சார்பில் குமாரசாமி, தி.மு.க., சார்பில் வைரம் பெரியசாமி போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வார்டுக்குட்பட்ட தொட்டிபாளையத்தார் தோட்டம் பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் குமாரசாமியின் மகன் விஜய் மற்றும் அ.தி.மு.க.,வினர் நோட்டீஸுடன் சேர்த்து, ஓட்டுக்கு 200 ரூபாய் விநியோகிப்பதாக, தி.மு.க., வேட்பாளர் வைரம் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.

அவர் தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதிக்கு சென்று, விஜய் உள்பட அ.தி.மு.க.,வினரை முற்றுகையிட்டார். போலீஸாருக்கு தகவல் கூறினர்.வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., வெங்கட்பிரபு மற்றும் போலீஸார் விசாரித்தனர். இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அ.தி.மு.க., நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் திரண்டு வந்த அ.தி.மு.க.,வினர், 'எப்படி எங்கள் ஆட்களை நீங்கள் பிடிக்க முடியும். அவர்களை அடித்தது யார்?' என்று சப்தம் போட்டனர்.

இரு தரப்பினரும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொண்டனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. வீரப்பன் சத்திரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.'பணம் கொடுப்பதாக தகவல் தெரிந்தால், தேர்தல் அதிகாரியிடம் மட்டுமே புகார் செய்ய வேண்டும். அவர்கள் தான் பணம் கொடுப்பவரை பிடிக்க முடியும். நீங்கள் எப்படி பிடிக்க முடியும். ஒருவர் மாற்றி ஒருவர் பணம் கொடுப்பதாக கூறி பிடித்தால் பிரச்னை வளரும்' என்று கூறிய இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தி.மு.க.,வினரை பார்த்து, 'உடனடியாக கலைந்து செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்' என்றார்.அதற்கு வைரம் பெரியசாமி, 'அ.தி.மு.க.,வினர் இரண்டு நாளாக பணம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் எத்தனை முறை கூறினாலும், அவர்கள் வருவதேயில்லை' என்றார். பின்னர், தி.மு.க.,வினர் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us