"காஞ்சனா' படம் பார்த்த மாணவன் தற்கொலை
"காஞ்சனா' படம் பார்த்த மாணவன் தற்கொலை
"காஞ்சனா' படம் பார்த்த மாணவன் தற்கொலை
ADDED : செப் 06, 2011 10:33 PM

ஈரோடு: 'காஞ்சனா' படம் பார்த்த பயத்தில், பள்ளி மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான்.
ஈரோடு, ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி; இவரது மகன் இளவரசன், 15; ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். சில தினங்களுக்கு முன், 'காஞ்சனா' சினிமா பார்த்தான். அன்று முதலே பேய் பயத்தில் இருந்தான். செப்., 4ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த இளவரசன், திடீரென எழுந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டான். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவன், நேற்று காலை பரிதாபமாக இறந்தான். இளவரசனின் தந்தை தண்டபாணி, அவரது நண்பர் குமார் ஆகியோர் கூறியதாவது: இளவரசன் பயந்த சுபாவம் கொண்டவன். சில தினங்களுக்கு முன், 'காஞ்சனா' சினிமாவை, 'சிடி'யில், திரும்பத் திரும்ப பார்த்தான். 'காஞ்சனா' கதாபாத்திரம் தன் முன் வருவதாக கூறிவந்தான். பள்ளியிலும் பாடத்தை கவனிக்காமல், பித்து பிடித்தது போல் இருந்தான். பெற்றோரை வரவழைத்து ஆசிரியர்கள் அறிவுரை கூறினர். ஆனால், அவனது பயம் போகவில்லை. 'என்னை கொன்று விடுங்கள், நான் உலகில் இருக்கக் கூடாது' என, பெற்றோரிடம் கூறிவந்தான். ஒரு உருவம் தன் முன் நின்று, தன்னை பயமுறுத்துவதாக நினைத்த இளவரசு, பல முறை தீக்குளிக்க முயற்சித்த போது, உறவினர்கள் காப்பாற்றினர். சம்பவத்தன்று இரவு, வீட்டு வாயிலில் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் சென்று தன் உடலில் தீவைத்துக் கொண்ட இளவரசன், சிறிதும் சத்தமே இல்லாமல், வீதிக்கு வந்தான். வெப்பத்தால் விழித்த நாங்களும், அக்கம்பக்கத்தினரும் தீயை அணைத்து, அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவன் இறந்தான். இவ்வாறு அவர்கள் கூறினர். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


