Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : ஜூலை 27, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

மதுரையில் நடந்த மர்ம மரணங்கள்...

அதிரடி விசாரணை ஆரம்பம்!



''மதுரையில நடந்த மர்ம மரணங்களைப் பத்தி தோண்டித் துருவ ஆரம்பிச்சிட்டாங்க பா...!'' என, அதிரடி தகவலுடன் பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.''என்ன சொல்லுதீரு வே...'' என, பதட்டமாக கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.''முந்தைய ஆட்சியில, மதுரையில மர்மமான முறையில பல மரணங்கள் நடந்திருக்கு பா... ஆனா, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கு எதுவும் போடாம அப்படியே அமுக்கிட்டாங்களாம்... இந்த மாதிரி மூடி மறைச்ச மரணங்களைப் பத்தி விசாரிக்க, போலீசாருக்கு உத்தரவு பறந்திருக்கு... இறந்தவர்களின் சொந்தக்காரங்கள்ட்ட விசாரணை நடத்தி, புகார் வாங்கற வேலையில போலீசார் மும்முரமாக இறங்கியிருக்காங்க...



''இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,கிட்ட ஒப்படைக்க அரசு திட்டமிட்டுருக்காம்... இந்த விவகாரத்துல, மதுரையைச் சேர்ந்த சில, 'தலை'கள் சிக்கப் போறது உறுதின்னு பேசிக்கறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.''உள்ளாட்சித் தேர்தல் வரை அவர் தான் தலைவரா இருப்பாருன்னு சொல்றாங்க...'' என, அடுத்த விஷயத்துக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.



''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' என, விவரம் கேட்டார் குப்பண்ணா.

''காங்கிரஸ்ல தங்கபாலு ராஜினாமா அப்படியே நிக்குதேங்க... உள்ளாட்சித் தேர்தல் வரை அவர் தான் தலைவரா நீடிப்பாருன்னு சொல்றாங்க... ஆனா, 'உள்ளாட்சித் தேர்தல்ல நிச்சயமா தி.மு.க.,வோட கூட்டணி வைக்கக் கூடாது'ன்னு கட்சித் தொண்டர்கள் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... 'மீறி, கூட்டணி வச்சா, சட்டசபை தேர்தலை விட மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்திக்க வேண்டியது வரும்'னு எச்சரிக்கறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''தி.மு.க., கூட்டணியில இருந்து விலகி என்ன செய்வா...'' என்றார் குப்பண்ணா.

''அ.தி.மு.க.,கிட்ட இப்போதைக்கு நெருங்க வாய்ப்பில்லை... அதனால, தனித்துப் போட்டியிடுவாங்க... அதுக்கேத்த மாதிரி, கட்சி நிர்வாகிகள் இப்பவே பேச ஆரம்பிச்சுட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''அறநிலையத் துறை வசூல் அதிகாரி மேல நடவடிக்கை எடுக்கப் போறாங்க வே...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார் அண்ணாச்சி.''கோவில் சொத்துல கை வைக்கிறது இவாளுக்கெல்லாம் லட்டு சாப்பிடற மாதிரி ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''கோவையில கோலோச்சிட்டு இருந்த அந்த அதிகாரி, கடந்த ஆட்சியில ஏகப்பட்ட ஊழல் புகார்ல சிக்கினவர்... ஆட்சி மாறியதும், 'அம்மா'வுக்கு வெள்ளி செங்கோல் கொடுக்கணும்; அது இதுன்னுட்டு, தன் கட்டுப்பாட்டுல வர்ற அத்தனை கோவில் செயல் அதிகாரிகள்ட்டயும், தலா 15 ஆயிரம், 'பில்'லைப் போட்டுட்டாரு...



''இந்தத் தகவல் அரசுக்குத் தெரிஞ்சு, அவரை காத்திருப்போர் பட்டியல்ல வச்சுட்டாவ... யாரையாவது பிடிச்சு, திரும்பவும் பதவிக்கு வர முயற்சி பண்ணுதாரு... ஆனா, அரசு அவர் மேல கடும் நடவடிக்கை எடுக்கப் போவுதாம்...'' என்றார் அண்ணாச்சி.''அசோக்... நில்லும் ஓய்...'' என, யாரையோ கூப்பிட்டபடி கிளம்பினார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us