Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர் கைது

ADDED : செப் 10, 2011 02:56 AM


Google News
திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் பைக் திருடிய மூன்று வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக், மொபட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்செங்கோடு, சண்முகாநகரைச் சேர்ந்தவர் வங்கி ஊழியர் விஜயகுமார் (25). அவர், நேற்று காலை 6.30 மணியளவில், மலைசுத்தி சாலை வழியாக செல்லும்போது மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், அவரது பைக்கை பறிக்க முயன்றுள்ளனர்.

அவர் கூச்சல் எழுப்பியதையடுத்து, மூவரும் அங்கிருந்து தப்பித் தலைமறைவாகினர். அதுகுறித்து, திருச்செங்கோடு டவுன் போலீஸில், விஜயகுமார் புகார் செய்தார். அதையடுத்து, இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீஸார், மலைசுத்தி சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு ஒரே பைக்கில் மூன்று வாலிபர்கள் அதி வேகமாக வந்துள்ளனர். அவர்களை பிடித்து, போலீஸார் விசாரணை செய்தனர். மூவரும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை செய்ததில், சேலம் மாவட்டம், ஆத்தூர் மணிவிழுந்தான் கிழக்கு தோட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (20), அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (20), அவரது சகோதரர் பிரசாந்த் (18) என்பது தெரியவந்தது.

மூவரும், கள்ளச்சாராயம் கடத்துவதற்கு பைக் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்ற விவரமும் தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில், ஆத்தூரைச் சேர்ந்த ஆபிரகாம் என்பரிடம் இருந்து, ஐந்து பைக்குகள், மொபட், ராமசாமியிடம் இருந்து, நான்கு பைக்குகள், திருச்செங்கோட்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து, 7 பைக்குகள், மொபட் என மொத்தம் மொத்தம், நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூவரும், வேறு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனரா என, போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கோவிந்தராஜ் என்பவர் திருவாச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார் அளித்த ஒரே நாளில், 16 வாகனங்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீஸாருக்கு, டி.எஸ்.பி., சுஜாதா பாராட்டு தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us