Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி அதிமுக.,-திமுக.,வேட்பாளர்கள் கடும் போட்டி

புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி அதிமுக.,-திமுக.,வேட்பாளர்கள் கடும் போட்டி

புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி அதிமுக.,-திமுக.,வேட்பாளர்கள் கடும் போட்டி

புளியங்குடி நகராட்சி தலைவர் பதவி அதிமுக.,-திமுக.,வேட்பாளர்கள் கடும் போட்டி

ADDED : அக் 01, 2011 11:26 PM


Google News

புளியங்குடி : புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக.,-திமுக., வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கரபாண்டியன் கூறியதாவது: புளியங்குடி பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தங்களது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானது தண்ணீர் பிரச்னை. நிலத்தடி நீர் குறைவால் கிணறுகளில் தண்ணீர் இருப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் துயரத்தை போக்கும் வகையில் வாலைமலையாற்றின் குறுக்கே ஒரு அணை கட்டவும், இப்பகுதியில் உள்ள குளங்கள், கண்மாய்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் ஊரணிகளை தூர்வாரி மழைக் காலங்களில் அதில் தண்ணீர் தேக்கவும் நடவடிக்கைகள் எடுப்பேன்.



மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நேரடியாக இலவசமாக சென்றடைய பாடுபடுவேன். மேலும் அனைத்து வார்டுகளிலும் முழு சுகாதாரத்தை மேம்படுத்த சுகாதார வளாகங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அதனை கண்காணித்து சுத்தம் செய்யப்படும்.



இவற்றை மேற்கொள்ள சுகாதார பிரிவுக்கு கூடுதலாக பணியாளர்கள் நியமிக்க பாடுபடுவேன். மேலும் நகராட்சியின் வருவாயை பெருக்க சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க முயற்சிகள் மேற்கொள்வேன். மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். எனது மனைவி கடந்த 1996 முதல் 2001 வரை புளியங்குடி நகராட்சி தலைவியாக பணியாற்றியுள்ளார். அப்போது தான் புளியங்குடி நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.



மேலும் அரசு மருந்தகம் அரசு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஆதலால் அனைத்து தெருக்களுக்கும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படும். தொடர்ந்து சூரிய சக்தியால் இயங்கும் சோலார் தெரு விளக்குகளும் அமைக்கப்படும். மேலும் புளியங்குடி நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இவற்றுக்கெல்லாம் அரசிடமிருந்து நிதியை பெற்று முதல்வரின் ஆணையின் படியும், தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் மற்றும் வாசு.,எம்.எல்.ஏ., துரையப்பா ஆகியோரது வழிகாட்டுதலின்படி சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றுவேன். மேலும் பொதுமக்கள் பிரச்னை தொடர்பாக எப்பொழுதும் என்னை சந்திக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.



புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வக்கீல் செல்வகுமார் கூறியதாவது: புளியங்குடி பகுதியில் நீண்ட காலமாகவே கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவற்றை போக்க தெருக்களில் கூடுதலான ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் அடிபம்புகள் மற்றும் மின் மோட்டாருடன் கூடிய தொட்டிகள் அமைக்கப்படும். மேலும் புளியங்குடி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இவற்றை போக்க புறவழிச்சாலை திட்டம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் கடந்த காலங்களில் நகராட்சியை நிர்வகித்தவர்கள் இவற்றையெல்லாம் போக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவற்றை முறைப்படுத்தி நிர்வாகத்தை சீரமைத்து புளியங்குடி நகராட்சியை நாட்டிலேயே முன்மாதிரி நகராட்சியாக மாற்றி செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.



மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகர்புறங்களில் குப்பைகளை அகற்றி தனிகவனம் செலுத்தி குப்பை இல்லா தூய்மையான நகரமாக மாற்றுவேன். அனைத்து தெருக்களில் இருக்கும் மின் கம்பங்களிலும் தெரு விளக்குகள் அமைக்கப்படும். நான் வக்கீலாக தொழில் செய்து வருவதால் மக்களுடன் இருக்கும் நட்புறவில் வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும். மேலும் புளியங்குடி மயான பகுதிகளில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு நெருங்கிவிட்டதால் ஏற்படும் மாசுவை தடுக்க அப்பகுதியில் மின்சார மயானம் அமைக்க பாடுபடுவேன். புளியங்குடி நகரின் சுகாதாரத்தை மேம்படுத்த பாதாள சாக்கடை திட்டம் விரைவில் கொண்டுவர பாடுபடுவேன். அனைத்து வார்டுகளிலும் பெண்களுக்கு நவீன கழிப்பிட வசதி செய்து தருவேன்.



மேலும் சலவை தொழிலாளர்களுக்கு தண்ணீர் வசதியுடன் துணிகள் சலவை செய்வதற்கு நவீன முறையில் தொழில்கூடம் அமைக்கப்படும். புளியங்குடி பகுதி தொடர்ந்து விரிவடைந்து வருவதால் நகராட்சியில் அனைத்து வசதிகளையும் கிடைக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us