பார்லி மழைக்கால தொடரில் 51 மணி நேரம் வீணடிப்பு
பார்லி மழைக்கால தொடரில் 51 மணி நேரம் வீணடிப்பு
பார்லி மழைக்கால தொடரில் 51 மணி நேரம் வீணடிப்பு
ADDED : செப் 08, 2011 11:41 PM

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சியினர் ஏற்படுத்திய கூச்சல் குழப்பங்கள் மற்றும் அமளியால், 51 மணி நேரம், லோக்சபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன என்று, சபாநாயகர் மீராகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் மீராகுமார் கூறியதாவது: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில், லோக்சபா மொத்தம் 26 அமர்வுகளையும், 104 மணி நேரம், மூன்று நிமிடங்கள் பணி நேரமாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டதால், கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதால், 51 மணி நேரம், ஆறு நிமிடங்கள், சபை நடவடிக்கைகள் நடக்கவில்லை. அதாவது, மொத்த பணி நேரத்தில் சரிபாதி நேரம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கேள்வி நேரத்தின் போது, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதால், லோக்சபா நடவடிக்கைகள் பல முறை ஒத்தி வைக்கப்பட்டன. எதிர்காலத்தில், கேள்வி நேரத்தின் போது, இத்தகைய இடையூறுகள் ஏற்படாது என, நம்புகிறேன். இந்த கூட்டத் தொடரின்போது, லோக்சபாவில், 500 கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில், 51 கேள்விகளுக்கு எழுத்து மூலமாக அல்லாமல், மேலோட்டமாக பதிலளிக்கப்பட்டது. இவ்வாறு மீராகுமார் கூறினார்.


