15 ஆண்டுக்குப் பின் பா.ம.க., தனித்து போட்டி : தலைவர் மணி தகவல்
15 ஆண்டுக்குப் பின் பா.ம.க., தனித்து போட்டி : தலைவர் மணி தகவல்
15 ஆண்டுக்குப் பின் பா.ம.க., தனித்து போட்டி : தலைவர் மணி தகவல்
ADDED : செப் 07, 2011 09:02 PM

சேலம்: ''தமிழகத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின், உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிட உள்ளது,'' என, அக்கட்சித் தலைவர் மணி தெரிவித்தார். சேலம் மாவட்ட பா.ம.க., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறுவதை, நேற்று அக்கட்சியின் தலைவர் மணி துவக்கி வைத்தார்.
அதன் பின் அவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், பா.ம.க.,வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள், 12ம் தேதி வரை வாங்கப்படும். இந்த தேர்தலில், பா.ம.க., வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 1996 தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின், தற்போது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாக, நாங்கள் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. பா.ம.க.,வுக்கு, மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அத்துடன், நிர்வாகிகளுக்கும் தேர்தல் அனுபவம் இருப்பதால், வெற்றியை தேடித் தருவர். உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். இந்த முறை மூலம் மட்டுமே, நேர்மையான முடிவுகளை கொடுக்க முடியும்.
இவ்வாறு மணி கூறினார்.


