தினமலரின் ஸ்ரீலிபி மென்பொருள் தமிழ் நாளிதழ்களுக்கு முன்னோடி :ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
தினமலரின் ஸ்ரீலிபி மென்பொருள் தமிழ் நாளிதழ்களுக்கு முன்னோடி :ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
தினமலரின் ஸ்ரீலிபி மென்பொருள் தமிழ் நாளிதழ்களுக்கு முன்னோடி :ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை : 'தினமலர்' பயன்படுத்தும் ஸ்ரீலிபி கணினி மென்பொருள், தமிழ் நாளிதழ்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என, 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
அறவாணன் ஆராய்ச்சி அறக்கட்டளையின், 11ம் ஆண்டு விழாவில், அறவாணர் சாதனை விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமை வகித்து, அவர் பேசியதாவது: தொன்மையான நாணயங்களை சேகரிப்பது, அவை குறித்து ஆய்வு செய்வது என்பதோடு நில்லாமல், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திலும் பங்காற்றி உள்ளேன். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தோடு இந்த ஆர்வத்தை சேர்த்துக் கொண்டேன். 1984ம் ஆண்டு சங்ககால நாணயத்தை மதுரையில் கண்டுபிடித்தேன். அதில், 'பெருவழுதி' என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயம் கண்டுபிடிப்பு மூலம், சங்ககால மன்னர்கள் நாணயம் வெளியிட்டனர் என்பது நிரூபணமாகியது.
'தினமலர்' நாளிதழின் கணினி மென்பொருளுக்கு 'ஸ்ரீலிபி' என பெயரிட்டனர். ஸ்ரீலிபி மென்பொருள் மிக எளிதாகக் கையாளக் கூடியது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் உள்ள நாளிதழ்களும், ஸ்ரீலிபி மென்பொருளையே பின்பற்றுகின்றன. இதை, தமிழ் மொழி வளர்ச்சிக்கு என் பங்களிப்பாகக் கருதுகிறேன்.
எழுத்து சீர்திருத்தம் வந்தபோது, எதிர்ப்பு கடுமையாக இருந்தது. எழுத்து சீர்திருத்தத்தை ஆதரிப்பவர்களை, தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் என சித்தரித்தனர். ஆனால், தமிழ் மொழி, எழுத்துச் சீர்திருத்தம் மூலம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அறவாணர் சாதனை விருது பெறும் நாச்சியார், கண் மருத்துவத்தில் முன்னோடியாகத் திகழ்பவர். அவரது சகோதரரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனருமான, டாக்டர் வெங்கடசாமியின் மருத்துவ நிர்வாக மாதிரி, உலகப் புகழ் பெற்றது. அதேபோல், திருச்சி தூய வளனார் கல்லூரி அதிபர் ஜான் பிரிட்டோ, தாவரவியலில், மிகச் சிறந்த பணியாற்றி உள்ளார். அவரது களவகைத் தாவரவியல் ஆய்வு, தமிழ் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தொண்டாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் ரத்தின வேங்கடேசனின் பெற்றோர்கள், சுபாஷ் சந்திர போசின், இந்திய தேசியப் படைப் பிரிவில் பணியாற்றியவர்கள். தமிழ் மொழிக்கான இவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியது. இவ்வாறு 'தினமலர்' ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் கோ.நாச்சியார், திருச்சி தூய வளனர் கல்லூரி அதிபர் ஜான் பிரிட்டோ, சிங்கப்பூர் தமிழ்போராசிரியர் ரத்தின வேங்கடேசன் ஆகியோருக்கு, க.ப.அறவாணன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
நாச்சியாரின் ஏற்புரை: சமூகத்துக்கு என்ன தேவையோ, அதை அறிந்து செயல்படு' என்ற தாரக மந்திரமே எங்களை வளர்த்துள்ளது. ஏழைக்குத் தேவைப்படும் மருத்துவத்தை அளிக்கிறோம். அதனால் தான், எங்களது, 48 கிளைகளில், 30 கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளன. எங்களது பணியை அங்கீகரிப்பதோடு, மேலும் ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது அமையும், என்றார்.


