கல்விக்கடன் பெற்றால் திருப்பி செலுத்த வேண்டும் : இந்தியன் வங்கி அதிகாரி அறிவுரை
கல்விக்கடன் பெற்றால் திருப்பி செலுத்த வேண்டும் : இந்தியன் வங்கி அதிகாரி அறிவுரை
கல்விக்கடன் பெற்றால் திருப்பி செலுத்த வேண்டும் : இந்தியன் வங்கி அதிகாரி அறிவுரை
ADDED : செப் 03, 2011 10:58 PM

மதுரை: ''கல்விக்கடன் பெற்றவர்கள் தவறாது திருப்பி செலுத்தினால், அடுத்தவர்களுக்கு கடன் கிடைப்பது எளிதாகும்,'' என்று மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் என்.பி.ராஜன் பேசினார். 'தினமலர்', அக்மி கல்வி, சமூக மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து எம்.பி.ஏ., படிப்பதற்கான 'மேட்' (Mஅகூ)தேர்வுக்கு, மாணவியருக்கு இலவச பயிற்சி அளிக்கின்றன. இதற்காக, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர் 500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு மாதங்கள், சனி, ஞாயிறுகளில் தினமும் 6 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கான துவக்க விழா, மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நேற்று நடந்தது. கல்வி ஆலோசகர் வத்சலா வரவேற்றார்.
தலைமை வகித்த தினமலர் வெளியீட்டாளர் டாக்டர்.ஆர். லட்சுமிபதி பேசியதாவது: 'தினமலர்' நாளிதழுக்கு சமூக பொறுப்புணர்வு அதிகம் உண்டு. பொதுமக்களை கல்வியில் மேம்படுத்துவது எங்கள் சமூக கடமை. பள்ளி மாணவர்களுக்காக 'ஜெயித்து காட்டுவோம், வழிகாட்டி' என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதனால், படிப்பில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயன் பெறுவது மகிழ்ச்சியான விஷயம். பெண்களுக்கு சமூகத்தில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாணவியர் எம்.பி.ஏ., படிப்பதற்காக இந்த இலவச பயிற்சியை துவக்கி உள்ளோம். குடும்பத் தலைவி படித்து இருந்தால் அந்த குடும்பம் முன்னேறும். அறிவுப்பூர்வமாக பெண்களை தயார்படுத்துவது இன்றைய அவசியம். எம்.பி.ஏ., படிப்பது, எம்.ஏ., படிப்பது போன்றது அல்ல. நீங்களாக முயற்சி செய்து, உங்களை சுயமாக தயார் செய்து, உரிய பயிற்சி பெற்று சாதிக்க வேண்டும். சவால்களை எதிர்கொண்டு நீச்சலடிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, டாக்டர்.ஆர். லட்சுமிபதி பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, இந்தியன் வங்கி துணை பொதுமேலாளர் என்.பி.ராஜன் பேசியதாவது: எம்.பி.ஏ., படிப்பிற்கு கடன் தர எல்லா வங்கிகளும் தயாராக உள்ளன. வேலை கிடைத்த பின்பு, கடன் பெற்றவர்களை தேடிச்சென்று கடனை செலுத்துமாறு கேட்க வேண்டி உள்ளது. பணம் திரும்ப வரும் என்ற உறுதி இருந்தால், கடன் தருவதில் பிரச்னை இல்லை. கடன் பெற்றவர்கள் தவறாது திருப்பிச் செலுத்தினால், அடுத்தவர்களுக்கு கிடைப்பது எளிதாகும். பெண்களுக்கு சுயதொழில் துவங்க ஒருகோடி வரை வங்கிகள் கடன் வழங்குகின்றன. சமூகத்தில் தடைகள் பல. பெண் நிர்வாகிகள் உருவாவது எளிது அல்ல. நேர்மறையான சிந்தனை இருந்தால் சாதிக்கலாம். மாறும் உலகில் சவால்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தகுதியானவர்கள் குறைவாக உள்ளனர். உங்கள் தகவல் தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒழுக்கம், நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம். இவ்வாறு என்.பி.ராஜன் பேசினார்.
தினமலர் மேலாளர் இன்ஜினியர் ஆர். லட்சுமிபதி பேசுகையில்,''எந்த வேலையாக இருந்தாலும் திட்டமிடுதல் அவசியம். 'மேட்'(Mஅகூ) தேர்வுக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது; தினமும் எத்தனை மணி நேரம் படிக்க போகிறீர்கள் என இன்றே திட்டமிடுங்கள். 'எம்.பி.ஏ., படிப்பு' என்ற கட்டடத்தை கட்டுவதற்கான, 'பூமிபூஜையே' இந்த பயிற்சி. இனி நீங்கள் ஒவ்வொரு படிக்கல்லாக முயற்சி செய்ய வேண்டும். இலவச பயிற்சி தானே என அஜாக்கிரதையாக இல்லாமல், கடினமாக உழைக்க வேண்டும்,'' என்றார்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலர் எம்.விஜயராகவன் பேசுகையில்,''தினமலர் இதழின் கல்விப்பணி பாராட்டிற்குரியது. அவர்களது கல்வி நிகழ்ச்சிகள் எங்கள் கல்லூரியில் நடப்பது பெருமை. வெளியீட்டாளர் ஆர். லட்சுமிபதி, சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லூரியை திறம்பட நிர்வகித்து வருகிறார். நிர்வாக விஷயங்களில் சிலவற்றை, அந்த கல்லூரியை போன்று, மன்னர் கல்லூரியிலும் செயல்படுத்தி உள்ளேன்,'' என்றார். அக்மி டிரஸ்டி பிரபாகரன் வாழ்த்தி பேசினார்.


