ADDED : ஆக 30, 2011 12:53 AM
பல்லடம் : அத்திக்கடவு குடிநீரை சீராக வினியோகிக்கக்கோரி, பல்லடம் ஜே.கே.ஜே., காலனி பொதுமக்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பல்லடம் ஜே.கே.ஜே., காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
நான்கு நாட் களுக்கு ஒருமுறை அத்திக்கடவு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கிய பின், ஆறு நாட்களுக்கு ஒரு முறை என்றாகியது.ஆனால், கடந்த ஒரு மாதமாக 10 நாட்களுக்கு ஒரு முறையே வினியோகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஜே.கே.ஜே., காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், பல்லடம் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.நகராட்சி தலைவர் ராமமூர்த்தியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:நான்கு நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர், தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. அதுவும் 45 நிமிடங்கள் மட்டுமே சப்ளையாகிறது. இதன் காரணமாக குடிநீருக்கு அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் பகுதியில் சிலர், குடிநீர் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுகின்றனர். இதன் காரணமாக, தண்ணீர் வேகமாக வருவதில்லை, என்றனர்.நகராட்சி தலைவர் பதிலளிக்கையில், ''அத்திக்கடவு இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற இன்னும் ஓராண்டாகும். அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தற்போது வரும் தண்ணீர் அளவை விட, மூன்று மடங்கு கூடுதலாக கிடைக்கும். அதுவரை தண்ணீர் அளவு குறைவாகவே இருக்கும். நாளை (இன்று) உங்கள் பகுதியில் ஆய்வு செய்து மின் மோட்டார் பொருத்தி, தண்ணீர் உறிஞ்சுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இதன்பின், பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்


