கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு பிரதமரை சந்திக்க டில்லி பயணம்
கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு பிரதமரை சந்திக்க டில்லி பயணம்
கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு பிரதமரை சந்திக்க டில்லி பயணம்
UPDATED : அக் 05, 2011 07:54 PM
ADDED : அக் 05, 2011 07:51 PM
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய போராட்ட குழுவினர் பிரதமரை சந்திக்க நாளை டில்லி செல்கின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணுஉலைகளில் முதலாவது மின் உற்பத்திக்கு தயாராக உள்ளது.
உற்பத்தியை துவக்க கூடாது என அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் 12 நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நேரடியாக அவர்களை சந்தித்து கேட்டுக்கொண்டதன்பேரில் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் அணுஉலைகளை மூடுவது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் வரும் 9ம் தேதி இடிந்தகரையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர்.இதற்கிடையே பிரதமர் அலுவலகத்தில் இருந்து போராட்டகுழுவினரை சந்திக்க அழைப்பு விடுத்தனர். பிரதமரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமையில் 10 பேர் குழுவினர் மாலையில் நெல்லையில் இருந்து சென்னை கிளம்பினர். டில்லி பயணம் குறித்து போராட்டகுழுவினர் கூறுகையில், ராதாபுரம் தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,மைக்கேல் ராயப்பன், கிறிஸ்தவ பாதிரியார்கள் ஜெயக்குமார், நாதன் மற்றும் புஷ்பராயன் உள்பட 10 பேர் குழு இன்று 6ம் தேதி சென்னையில் தமிழக தலைமை செயலரை சந்தித்து பேசுகிறோம். தமிழக அரசின் ஏற்பாட்டில் டில்லி செல்கிறோம். நாங்கள் வைத்துள்ள கோரிக்கை மனுவில் அணுஉலையை மூட வலியுறுத்தியுள்ளோம். ஆனால் தமிழக அரசின் மனுவில் அணுஉலை குறித்த பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என இருக்கும் என தெரிகிறது. ஆனால் பிரதமரிடம் நாங்கள் அணுஉலையை மூடத்தான் கோரிக்கை வைக்கிறோம்.சென்னையில் இருந்து அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் குழுவோடு நாங்களும் டில்லி செல்கிறோம். டில்லியில் பிரதமருடன் நாளை 7ம் தேதி நடக்கும் சந்திப்பிற்கு பிறகே கூடங்குளத்தில் போராட்டத்தை தொடருவதா இல்லையா என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.


