Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பஸ் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு : இரவு 11 மணிக்கு கழுகுமலைக்கு பஸ் இயக்க கோரிக்கை

பஸ் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு : இரவு 11 மணிக்கு கழுகுமலைக்கு பஸ் இயக்க கோரிக்கை

பஸ் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு : இரவு 11 மணிக்கு கழுகுமலைக்கு பஸ் இயக்க கோரிக்கை

பஸ் இல்லாமல் பயணிகள் பரிதவிப்பு : இரவு 11 மணிக்கு கழுகுமலைக்கு பஸ் இயக்க கோரிக்கை

ADDED : ஜூலை 24, 2011 01:19 AM


Google News

கோவில்பட்டி : கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இரவு 11 மணிக்கு பஸ் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் பஸ் இல்லாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவில்பட்டி தாலுகாவில் வளர்ந்து வரும் மிகப்பெரிய ஊர் கழுகுமலை. இங்கு ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகளும், வர்த்தக நிறுவனங்களும் உள்ளன. மேலும் கழுகுமலையை சுற்றியுள்ள சுமார் 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைக்காக கழுகுமலைக்கு வந்து பின்னர் கோவில்பட்டிக்கு, அல்லது சங்கரன்கோவிலுக்கு சென்றுவருகின்றனர்.



தற்பொழுது கழுகுமலை கிராம சுற்றுலாத்தலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளும் நடந்துகொண்டிருப்பதால் சுற்றுலாவும் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கழுகுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப்போல் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலையில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி கோயில் புகழ்பெற்றது. தென் மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக அதிகப்படியான முருகபக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற புண்ணியத்தலம் இது. கழுகுமலை முருகனை தரிசிக்க செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வந்துசெல்கின்றனர்.கழுகுமலையில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளி, கல்லூரிக்காக கோவில்பட்டி சென்றுவருகின்றனர்.



இதைப்போல் கழுகுமலையில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்டோர் வேலை விஷயமாக கோவில்பட்டிக்கு வந்துசெல்கின்றனர். இவர்களை தவிர வியாபாரிகள், விவசாயிகள் என்று நாள்தோறும் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும். இவர்களின் போக்குவரத்து வசதிக்காக கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கும், கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கும் போதிய அளவு பஸ்கள் இயக்கப்பட்டாலும், காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் போதுமான பஸ்வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பீக்அவர்ஸ் என்று சொல்லக்கூடிய காலை 8 மணியில் இருந்து 9.30 மணிவரை போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த சமயத்தில் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதும். பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில்தான் பயணம் செய்கின்றனர்.



சங்கரன்கோவிலில் இருந்துவரும் பஸ்கள் அங்கிருந்து வரும்போது ஹவுஸ் புல்லாகிவருவதால் கழுகுமலையில் உள்ள பயணிகள் படியில் தொங்கிகொண்டுதான் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே காலை நேரத்தில் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு தனியாக அரசு பஸ்கள் இயக்கவேண்டும் என்று பயணிகள், மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இரவு 10 மணிக்கு மேல் பஸ் கிடையாது: இதைப்போல் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு இரவு 10.15 மணிக்கு பிறகு பஸ் கிடையாது. 10.15 மணிக்கு ஒரு பஸ்சும், அதையடுத்து 10.30 மணிக்கு ஒரு பஸ்சும் கழுகுமலை வழியாக புளியங்குடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. புளியங்குடி டிப்போவைச் சேர்ந்த இந்த இரண்டு பஸ்களும் திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் இந்த இரண்டு பஸ்களும் ஒழுங்காக வருவதில்லை. சில சமயங்களில் டயர் பஞ்சர், அல்லது டிரைவர் இல்லாமல் டிரிப் நிறுத்தப்பட்டுவிடுகிறது. இதைப்போல் ஏதாவது ஒரு வழித்தடத்தில் பஸ் இல்லையென்றால் இந்த இரண்டு பஸ்சில் ஏதாவது ஒன்றை அங்கு அனுப்பிவிடுகின்றனர். டயர் பஞ்சராகி சில சமயங்களில் நின்றாலும் கூட, டிரைவர் கண்டெக்டர் இல்லாமல் பல சமயங்களில் நிறுத்தப்பட்டுவிடுதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.



சில சமயங்களில் மிக அட்வான்சாக இந்த இரண்டு பஸ்சும் வந்துவிடும். அதாவது 10 மணிக்கும் இதையடுத்து10.45 க்கு போகவேண்டிய அடுத்த பஸ் 10.15 மணிக்கும் சென்றுவிடுகின்றன. இதனால் கோவில்பட்டியில் இந்த பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் வருமா, வராதா என்பது தெரியாமலே காத்துகிடப்பர். இதுபற்றிபுகார் கொடுத்தால் அது புளியங்குடி டிப்போ வண்டி, அதனால்அங்குதா ன் புகார் கொடுக்கவேண்டும் என்று பொறுப்பான அதிகாரிகள் தட்டிகழித்துவிடுகின்றனர். பஸ்சுக்காக பஸ்ஸ்டாண்டில் காத்துகிடக்கும்போதுதான் பயணிகள் படாதபாடுபடுகின்றனர். பஸ்ஸ்டாண்டில் அதிகநேரம் பஸ்க்காக நின்றுகொண்டிருந்தால் அங்கு காவலில் இருக்கும் போலீசாரின் கெடுபிடியோ சொல்லிமுடியாது. இவர்களின் கெடுபிடிக்கு பயந்தே கழுகுமலை செல்லும் பயணிகள் 7 ரூபாய் கொடுத்து பஸ்சில் போவதற்காக பதிலாக 200 ரூபாய் கொடுத்து ஆட்டோ, அல்லது காரில் செல்கின்றனர்.



குடும்பத்துடன் நிற்கும் பெண்களிடம் குடிபோதையில் வரும் குடிமகன்கள் கொடுக்கும் தொந்தரவுகள் ஒருபுறம், இத்தனையும் அனுபவித்து பயணிகள் படும்பாட்டை சொல்லிமாளாது. இந்த கடைசி பஸ்சை நம்பி கழுகுமலைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளொன்றுக்கு 50ஐ தாண்டும். சில சமயங்களில் 100 அல்லது 120 டிக்கெட்டுகள் வரை இருக்கும். முகூர்த்தநாட்கள் அல்லது வேறு ஏதாவது விசேஷ நாட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த சமயத்தில் கூடுதலாக இரண்டு பஸ்கள் விட்டாலும் ஹவுஸ்புல்லாகத்தான் செல்லும். கோவில்பட்டியில் உள்ள பெரும்பாலான ஜவுளிக்கடைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும், தனியார் தொழிற்சாலைகளிலும் கழுகுமலையைச்சேர்ந்தவர்கள் தான் அதிகளவில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் வேலை முடிந்துவரவே 10.30 மணிவரை ஆகிவிடும்.



இதுதவிர வியாபார விஷயமாக, பொருட்கள் ஆர்டர் கொடுக்க மதுரை சென்று திரும்பும் கழுகுமலையைச் சேர்ந்த வியாபாரிகள் பெரும்பாலானோர் இந்த இரண்டு பஸ்களை நம்பிதான் வருவர். ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக சில சமயங்களில் இந்த இரண்டு பஸ்சும் அட்வான்ஸ்சாக சென்றிருக்கும், அல்லது வராமல் இருக்கும். ஆகையால் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கோவில்பட்டியில் இருந்து இரவு 11 மணிக்கு கழுகுமலையில் ஹால்ட்டாகும் வகையில் ஒரு அரசு பஸ்சை இயக்கவேண்டும். வியாபாரிகள், தொழிலாளர்கள் பெண்கள் படும் தொல்லைகளுக்கு கூடிய விரைவில் விடிவு கிடைக்கவேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பு.நிறைவேறுமா.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us