ADDED : செப் 10, 2011 04:14 AM
சுரண்டை : கடங்கனேரியில் மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார்
அளித்ததின் பேரில் ஊத்துமலை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை
தேடி வருகின்றனர்.
கடங்கனேரி கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர்
சுப்பிரமணியநாடார் மகன் ஆராய்ச்சிமணி (55). இவரது இரண்டாவது மகள் மாலா
(24). இவர் எம்.காம் படித்துவிட்டு பாளை., பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷன்
அருகிலுள்ள தனியார் அலுவலகத்தில் ஆடிட்டர் வேலை செய்து வந்தார். அப்போது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலராமன் மகன் ரவி என்பவர் மாலாவை
அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மாலாவை வீட்டிற்கு அழைத்து
செல்லுமாறும், வேலைக்கு வேண்டாம் எனவும் வேலை பார்த்த இடத்தில்
கூறியுள்ளனர். இதனால் மாலாவின் தந்தை ஆராய்ச்சிமணி மகளை வீட்டிற்கு அழைத்து
சென்றுவிட்டார். பின்னர் கடந்த 5ம் தேதி காலை 8 மணிக்கு பாளை.,யில் தான்
படித்த கல்லூரியில் சர்டிபிகேட் வாங்கி வருவதாக கூறி மாலா சென்றுள்ளார்.
ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. அன்று மதியம் தனது அக்கா கணவர்
கண்ணனுக்கு போன் செய்து, ''என்னை ஆரணியை சேர்ந்த ரவி என்பவர் கடத்தி கொண்டு
செல்கிறார். என்னை காப்பாற்ற ஏற்பாடு செய்யுங்கள்'' என்று
கூறியிருக்கிறாள். இதனால் அதிர்ச்சியடைந்த மாலாவின் தந்தை ஆராய்ச்சிமணி
ஊத்துமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஊத்துமலை தலைமை
காவலர் பால்முருகன் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ்
சுரேஷ்பீட்டர் மேல் விசாரணை செய்து மாயமான மாலாவையும், ரவியையும் தேடி
வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


