இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது
இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது
இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

கொழும்பு : இலங்கையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணம் உட்பட, நாடு முழுவதும், நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
இதற்காக, நாடு முழுவதும், 459 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில், ராணுவம் மற்றும் போலீசார் உட்பட, 6,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காலை, 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, மாலையில் முடிந்தது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், ஆளும் கூட்டணிக்கு, தமிழ் தேசிய கூட்டணி, பெரும் சவாலாக விளங்குகிறது. தேர்தல் முடிந்ததும், ஓட்டுப் பெட்டிகள், அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று இரவே, ஓட்டும் எண்ணும் பணி துவங்கியது. இந்நிலையில், தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த விடாமல், தங்கள் வேட்பாளர்களுக்கு, ஆளும் கூட்டணி சார்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக, தமிழ் தேசிய கூட்டணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும், புகார் தெரிவித்திருந்தன.
இதுகுறித்து போலீசார், ''தேர்தல் காலத்தில், பெரிய அளவில் அசம்பாவிதமோ, வன்முறையோ நடக்கவில்லை. நேற்று (நேற்று முன்தினம்) அனுராதபுரத்தில் நடந்த மோதலில், ஒருவர் கொல்லப்பட்டார். இதுவும், தேர்தல் தொடர்பான மோதல் கிடையாது'' என, தெரிவித்துள்ளனர்.


