Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/உள்ளாட்சி தேர்தலில் அணுசக்தி துறை ஊழியர் குடும்பத்தினர் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் அணுசக்தி துறை ஊழியர் குடும்பத்தினர் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் அணுசக்தி துறை ஊழியர் குடும்பத்தினர் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் அணுசக்தி துறை ஊழியர் குடும்பத்தினர் போட்டி

ADDED : அக் 12, 2011 02:42 AM


Google News
மாமல்லபுரம் : அணு சக்தித் துறை கல்பாக்கம் நகரியம், உள்ளாட்சி அதிகார வரம்பில் இடம் பெற்றுள்ளதால், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவியை கைப்பற்ற, அணுசக்தித் துறை ஊழியர் குடும்பத்தினர், உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணுசக்தி மறுசுழற்சி மையம், பாவினி அணுமின் திட்டம், ஆகிய அணுசக்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள், பல்வேறு அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் வசிக்க, அணுசக்தித் துறையின் கல்பாக்கம் நகரியம் உள்ளது.

இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் நகரியம் உருவாகாத போது, இப்பகுதி புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளில் இடம் பெற்றிருந்தது.நகரியம் உருவான பின், ஊராட்சிகளின் பரப்பளவு குறைந்தது. தற்போது, நகரியம் வடகிழக்கில் சதுரங்கப்பட்டினம் ஊராட்சி, தென்மேற்கில் புதுப்பட்டினம் ஊராட்சி உள்ளது. நகரியத்தில் குடிநீர், சுகாதாரம் உட்பட அனைத்து வித அடிப்படை வசதிகளையும், அணுசக்தித் துறை மேற்கொள்கிறது. அதையொட்டிய கிராமப் பகுதிகளில், இரண்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறது. இந்நகரியம், அணுசக்தித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், உள்ளாட்சி அதிகாரம் தேவையற்றது.ஆனால் ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட எட்டு வார்டுகள், சதுரங்கப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு வார்டுகள் நகரியத்தில் அமைந்துள்ளன. அதேபோல், ஊராட்சி ஒன்றியம் 18 வது வார்டின் முழுப்பகுதியும், 16, 17, 20 ஆகிய வார்டுகளின் பெரும்பகுதியும் நகரியத்தில் இடம் பெற்றுள்ளது. இங்கு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.நகரியத்தில் உள்ள, இரண்டு ஊராட்சிகளின் 10 வார்டுகள், ஊராட்சி ஒன்றியத்தின் இரண்டு வார்டுகள், ஆகியவற்றில் உறுப்பினர் பதவிக்கு, முந்தைய உள்ளாட்சி தேர்தல்களில் நகரியத்தை சேர்ந்தவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை. வெளியிடங்களை சேர்ந்தவர்களே தொடர்ந்து போட்டியிட்டனர்.தற்போது நகரிய பகுதி பதவிகளை கைப்பற்ற, அணுசக்தித்துறை ஊழியர்களின் குடும்பத்தினரும் ஆர்வமாக போட்டியிடுகின்றனர். ஊராட்சி ஒன்றியத்தின் 16 வது வார்டு, ஆதிதிராவிடர் பெண் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டினத்தை சேர்ந்த தனலட்சுமி தி.மு.க., சார்பிலும், கடம்பாடியைச் சேர்ந்த சரோஜா காங்கிரஸ் சார்பிலும், புதுப்பட்டினத்தை சேர்ந்த லில்லி ம.தி.மு.க., சார்பிலும், நகரியத்தை சேர்ந்த பவானி அ.தி.மு.க., சார்பிலும், வனிதா சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.ஒன்றியத்தின் 18 வது வார்டு பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியிடங்களை சேர்ந்த சம்பூர்ணம் (தற்போது ஒன்றியக் குழுத்தலைவர்) தி.மு.க., சார்பிலும், ராமச்சந்திரன் அ.தி.மு.க., சார்பிலும், அகமது ஷரிப் காங்கிரஸ் சார்பிலும், கல்பனா தே.மு.தி.க., சார்பிலும், சில சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். நகரியத்தைச் சேர்ந்த சாந்தி, ரவி, கங்காதரன் ஆகியோர் வெளியிடங்களை சேர்ந்தவர்களை எதிர்த்து, சுயேச்சைகளாக களம் இறங்கி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us