ADDED : அக் 12, 2011 04:38 PM
திருச்சி: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் இடைத்தேர்தலை திருச்சி மேற்கு தொகுதியில் சந்திக்கிறது.
அமைச்சர் மரியம் பிச்சை காலமானதை தொடர்ந்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும் போட்டியிடுகின்றனர். இரண்டுகட்சிகளும் அனுதாப அலையை எதிர்பார்த்துள்ளன.இந்த தேர்தலில், 2,08, 427வாக்காளர்கள் தங்களது ஓட்டினை பதிவு செய்ய உள்ளனர். தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொகுதிக்கு 3 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவு அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பையும் ஏற்பாடுத்தாத போதிலும் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் இந்த தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பாடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் 20 அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து கருணாநிதி தேர்தல் பிரசாரம் செய்தார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினும் திருச்சி மேற்கு தொகுதியின் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் 20ம் தேதி எண்ணப்படுகின்றன.


