ரூ. 10 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: ராஜஸ்தான் ஆசாமிகள் இருவர் கைது
ரூ. 10 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: ராஜஸ்தான் ஆசாமிகள் இருவர் கைது
ரூ. 10 லட்சம் மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்: ராஜஸ்தான் ஆசாமிகள் இருவர் கைது
கோவை:கோவை வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த, ரூ.10 லட்சம் மதிப்பிலான 'அபின்' பறிமுதல் செய்யப்பட்டது.
பைக்கில் அதிவேகமாக வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். சுற்றிவளைத்து பிடித்து சோதனையிட்ட போது, ஒரு கிலோ அபின் கடத்தப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பைக்கில் வந்த, ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம், கஞ்சோளி பகுதியை சேர்ந்த ராஜேந்திரசிங், 27, அவனது கூட்டாளி மகேந்திரசிங், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தல்காரர்கள் இருவரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'ராஜஸ்தான் மாநிலம், பில்வாடா பகுதியில் வசிக்கும் அறிமுகமான நபரிடம், அபினை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க திட்டமிட்டோம். குறுகிய காலத்தில் பணக்காரராக வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக, ராஜஸ்தானில் இருந்து அபினை கோவைக்கு கடத்தி வந்து, தொண்டாமுத்தூரில் வசிக்கும் பாலு என்பவர் மூலமாக, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலுள்ள நபருக்கு சப்ளை செய்ய இருந்தோம். இதற்காகவே, கணபதி பகுதியில் கஸ்தூரிபாய் நகர், நான்காவது வீதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அபினை, வீட்டுக்கு கடத்திச் சென்று, தொண்டாமுத்தூரை சேர்ந்த பாலுவுக்கு கைமாற்றுவதற்குள் பிடிபட்டு விட்டோம்' என, தெரிவித்துள்ளனர்.
என்.ஐ.பி.சி.ஐ.டி.,யின் டி.எஸ்.பி., ராமசாமி கூறியதாவது:போதைப் பொருள் தொடர்பாக, நடப்பாண்டில் இதுவரை 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நபர்களிடம், 30 லட்சம் மதிப்பிலான 210 கிலோ கஞ்சா, தற்போது ஒரு கிலோ அபின் கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் ஏழு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபினுடன் பிடிபட்டுள்ள இரு நபர்கள், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன் கடத்தலை ஆரம்பித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கிலோ அபினை 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்தும் வாங்கி, தொண்டாமுத்தூரை சேர்ந்த பாலு என்பவரிடம் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்ட முயற்சித்துள்ளனர். இவர்கள் பிடிபட்டதும் பாலு தலைமறைவாகி விட்டார். பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ அபினின் சர்வதேச மதிப்பு, 10 லட்சம் ரூபாய்.இவ்வாறு, டி.எஸ்.பி., ராமசாமி தெரிவித்தார்.


