கரூர் நகராட்சி தி.மு.க., வேட்பாளர்மீது நிலஅபகரிப்பு புகாரால் பரபரப்பு
கரூர் நகராட்சி தி.மு.க., வேட்பாளர்மீது நிலஅபகரிப்பு புகாரால் பரபரப்பு
கரூர் நகராட்சி தி.மு.க., வேட்பாளர்மீது நிலஅபகரிப்பு புகாரால் பரபரப்பு
ADDED : அக் 06, 2011 12:10 AM
கரூர்: கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் மீது, ஒரு கோடியே, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து விட்டதாக, மூதாட்டி கொடுத்த நில அபகரிப்பு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் தாந்தோணிமலை ஆச்சிமங்கலம் பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த காமாயி அம்மாள் (58).
இவர் கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் கடந்த நான்காம் தேதி நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:ஆச்சிமங்கலம் கிராமத்தில் எனது தந்தை நல்லமாச்சா நாயக்கருக்கு சொந்தமான, 1.30 ஏக்கர் நிலம் இருந்தது. 1964ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார். இதனால் அந்த நிலத்தை நான் அனுபவித்து வந்தேன். என் தந்தையோ அல்லது நானோ நிலம் தொடர்பாக எந்த ஆவணத்தையும் யாருக்கும் தரவில்லை.இந்நிலையில் ஆச்சிமங்கலத்தை சேர்ந்த பழனிநாயக்கர் என்பவரது மகன் பொம்மநாயக்கர் என்பவரின் தூண்டுதலின் பேரில், தாந்தோணிமலையை சேர்ந்த தி.மு.க., நகர செயலாளர் ரவி என்பவர் போலி பட்டா தயாரித்து கொடுத்ததால், அவரது மனைவி பூங்கொடி மற்றும் ராயனுரை சேர்ந்த தண்டபாணி ஆகியோர், ஒரு கோடியே, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து கொண்டனர். மேலும், என் நிலத்துக்குள் என்னை செல்ல விடாமல் தடுத்து வருகின்றனர். போலி பட்டா தயாரித்து நிலத்தை அபகரித்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.புகாருக்கு ஆளாகியுள்ள தாந்தோணி நகர, தி.மு.க., செயலாளர் ரவி, தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கான, தி.மு.க., வேட்பாளர் ஆவார். இதுகுறித்து பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள அவர் கூறுகையில், ''என் மீது வேண்டும் என்றே பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் என்னிடத்தில் உள்ளது. விசாரணை என்று வரும் பட்சத்தில் அதை சட்டபூர்வமாக சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.


