ADDED : செப் 07, 2011 12:25 AM
கோவை : ரசாயன பூச்சு பயன்படுத்திய விநாயகர் சிலைகளை கரைத்ததால், கோவை
முத்தண்ணன் குளத்தில் தண்ணீர் நிறம் மாறியுள்ளது.
சதுர்த்தியை முன்னிட்டு,
முக்கிய சந்திப்புகளில் விநாயகர் சிலை நிறுவி வழிபடுவது பக்தர்கள் வழக்கம்.
விழா நிறைவுக்கு வந்ததும், இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து விடுவர்.
'இத்தகைய விநாயகர் சிலைகளை செய்வோர், நீரில் கரையக்கூடிய கிழங்கு மாவு,
இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்று மாவட்ட நிர்வாகம்
அறிவுறுத்தியுள்ளது; மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். எனினும், சிலை செய்வோர் பலர், செயற்கை சாயங்களை
பயன்படுத்தியுள்ளது இப்போது அம்பலம் ஆகியுள்ளது. கோவை மாநகரில் வெவ்வேறு
இடங்களில் வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள், முத்தண்ணன் குளத்தில்
கரைக்கப்பட்டன. சிலைகளில் இருந்த ரசாயன சாயத்தால், குளத்தில் இருக்கும்
தண்ணீர் நீல நிறமாக மாறியுள்ளது. இரண்டு நாட்கள் ஊறிய பிறகும், பத்துக்கும்
மேற்பட்ட சிலைகள் கரையாமல் மிதக்கின்றன. இந்த சிலைகள், 'பிளாஸ்டர் ஆப்
பாரீஸ்' கொண்டு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மாசு
கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் காமராஜிடம் கேட்டபோது, ''விநாயகர்
சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் கரைப்பதற்கு முன்பாக, நீர்நிலைகளில்
மாதிரி சேகரித்துள்ளோம். இப்போது சிலை கரைப்பு முடிந்து விட்ட நிலையில்,
இன்று மீண்டும் அதே நீர்நிலைகளில் மாதிரி சேகரிக்க முடிவு செய்துள்ளோம்.
ஆய்வக சோதனை முடிவு கிடைப் பதற்கு ஒரு வாரம் ஆகும். அதன் அடிப்படையில் உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


