Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்டத்தில் சுகாதாரத் துறை திட்ட இயக்குனர் ஆய்வு

மாவட்டத்தில் சுகாதாரத் துறை திட்ட இயக்குனர் ஆய்வு

மாவட்டத்தில் சுகாதாரத் துறை திட்ட இயக்குனர் ஆய்வு

மாவட்டத்தில் சுகாதாரத் துறை திட்ட இயக்குனர் ஆய்வு

ADDED : செப் 07, 2011 10:19 PM


Google News
திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் பங்கஜ் குமார் பன்சால் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு சுகாதார துறை திட்ட இயக்குனர் டாக்டர் பங்கஜ் குமார் பன்சால் நேற்று காலை 8.30 முதல் 10.30 மணி வரை திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தார்.மருத்துவர் அறைகள், செவிலியர்கள் பணி புரியும் அறைகளில் கழிவு பொருட்களை வெளியேற்ற பக்கெட்டுகள் வைக்க உத்தர விட்டார். மகப்பேறு மருத்துவ பிரிவில் ஏன் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வில்லை என கேட்டார். மருத்துவமனையில் தண்ணீர் வசதி குறைவாக உள்ளது. சுகாதாரம் இல்லை. இது வரை 12 மாவட்டங்களில் ஆய்வு செய்தேன். இது போன்ற மோசமான மருத்துவமனையை பார்க்கவில்லை என்றார். அனைத்திற்கும் தலைமை மருத்துவர் பொறுப்பேற்க வேண்டும். விரைவில் இந்த நிலையை சீரமைக்க உத்தரவிட்டார். பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை யில் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டார். தீவிர சிகிச்சை பிரிவுகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கூறினார்.

குழந்தை பராமரிப்பு பிரிவில் போதிய அளவிற்கு வார்மர் (கதகதப்பான் கருவி) பொருத்த கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடவடிக்கைகளை பார்வையிட்டேன். பராமரிப்பு முறைகள் குறித்து மருத்துவ கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்கினேன். தற்போது தேவைப் படும் மருந்துகள், சாதனங்கள் குறித்து கேட்டு பெற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தேவையான சிடி ஸ்கேன் போன்ற அத்தியாவசிய அடிப்படை சாதன வசதிகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவ மனையில் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டு, 105 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் மகப்பேறு மருத்துவமனை, மேல் நிலை நீர் தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, 101 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புற நோயாளிகள் பிரிவு, நவீன சமையலறையை பார்வையிட்டார்.தொடர்ந்து பயன்படுத்தாமல் உள்ள அவசர தீவிர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே மற்றும் கண் பரிசோதனை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். புதிதாக கட்டப்படும் பிரசவ அறை அருகே வீசும் துர்நாற்றத்தை தடுக்க டாக்டர்கள், நர்ஸ்சுகள் ஆளுக்கொரு மரக் கன்று நட்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.மாவட்ட கலெக்டர் மணிமேகலை, மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் பரஞ்ஜோதி, சுகாதார துறை துணை இயக்குனர்கள் கீதா, குமரேசன், மருத்துவ கண்காணிப்பாளர் நீதிபதி, துணை கண்காணிப்பாளர் சிவசங்கரன், டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், மணிவண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us