Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : அக் 13, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
கோ-ஆப்டெக்சில், 'லெட்டர் பேடு' சங்கங்களுக்கு, 'ஆர்டர்!'

''சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புதுப்பிப்பு வேலைகளை செஞ்சுட்டு இருக்காங்க பா...!'' என, இன்றைய விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''என்னன்னு விளக்கமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''உள்ளாட்சித் தேர்தல் மற்றும் திருச்சி இடைத்தேர்தல் நடக்கறதால, அமைச்சர்கள் எல்லாம் ஊர்கள்ல முகாமிட்டிருக்காங்க... அதனால, தலைமைச் செயலகத்துக்கு வர்றது கிடையாது... அவங்க வராததால, கட்சிக்காரங்க கூட்டமும் இல்லை... இடையில், ஆயுதபூஜை, காலாண்டு விடுமுறை வந்ததால, தலைமைச் செயலகத்துல பெரும்பாலான ஊழியர்களும் லீவுல போயிட்டாங்க... இதனால, தலைமைச் செயலகமே வெறிச்சோடி இருந்துச்சு...

''இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அமைச்சர்களோட அறைகள், உயரதிகாரிகளோட அறைகளை புதுப்பிக்கற வேலை ஜரூரா நடந்துட்டு இருக்கு பா... புதிய தலைமைச் செயலகம் இருந்தும், கோட்டையிலேயே செயல்பட இந்த அரசு முடிவு செய்ததால, குறைந்த அவகாசத்துல அவசர அவசரமா, அறைகளை புதுப்பிக்கற பணியை செஞ்சுட்டு இருக்காங்க... தேர்தலுக்குள்ள மீதி வேலைகளை முடிக்க திட்டமிட்டுருக்காங்க...'' என்றார் அன்வர்பாய்.

''அலுவலகமே இல்லாத சங்கங்களுக்கு எல்லாம் கோடி கோடியா ஆர்டர் கொடுக்கறா ஓய்...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''என்ன விவகாரம்ங்க...'' என விசாரித்தார் அந்தோணிசாமி.

''கோ-ஆப்டெக்சுக்குத் தேவையான துணிகளை, கூட்டுறவு சங்கங்கள் மூலமா கொள்முதல் செய்வா ஓய்... அரசுத் துறை நிறுவனத்துல இருந்து ஆர்டர் கிடைச்சா, என்னென்ன லாபம்னு தெரியாதா...? அதனால, ஆர்டர் வாங்கறதுக்கு எப்பவுமே போட்டா போட்டி இருக்கும் ஓய்...

''பிரச்னை என்னன் னா, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சங்கங்கள் தவிர மற்ற எல்லாமே வெறும், 'லெட்டர் பேடு' சங்கங்கள் தான்... அவாளுக்கு, சொந்தமா ஓர் அலுவலகம் கூட கிடையாது...

''ஆனா, இந்த சங்கங்களுக்கு ஆர்டர் கொடுத்தே ஆகணும்னு, துறைத் தலைமையிலிருந்து கடும் நெருக்கடியாம்... வேற வழியில்லாம, ஆர்டரும் கொடுத்துட்டாளாம்... இதுல, அரசு பணம் எத்தனை கோடி வீணாகப் போறதோன்னு, உள்ளே இருக்கற அதிகாரிகள் கவலைப்படறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

''ஆதரவு கேட்காத கட்சிக்கு வலியப்போய் ஆதரவு கொடுத்திருக்காங்க...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அந்தோணிசாமி.

''எந்தக் கட்சி ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''திருச்சி மேற்கு தொகுதியில, இன்னைக்கு இடைத்தேர்தல் நடக்குதுங்க... இதுல, தி.மு.க.,வுக்கு ஆதரவு தர்றதா, கடைசி நேரத்துல விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிச்சிருக்குங்க... ஆனா, தி.மு.க., தரப்புல இருந்து யாரும் ஆதரவு கேட்கலை...

''தனியா இருந்தா, வர்ற தேர்தல்கள்ல தேற மாட்டோம்னு, கட்சித் தலைவரும், மத்தவங்களும் நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்காங்க... அதனால தான், உறவை புதுப்பிக்கறதுக்காக, தி.மு.க.,வை கடுமையா விமர்சனம் செய்ததை மறந்து, திடீர்ன்னு ஆதரவுக்கரம் நீட்டியிருக்காங்களாமுங்க...'' எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி கிளம்ப, மற்றவர்களும் புறப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us