குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு : ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்
குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு : ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்
குருவாயூர் புதிய மேல்சாந்தி தேர்வு : ஆறு மாதங்களுக்கு பதவி வகிப்பார்
ADDED : செப் 17, 2011 09:08 PM
குருவாயூர் :குருவாயூர் கிருஷ்ணன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவி காலம் ஆறு மாதங்கள்.கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய மேல் சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது மேல்சாந்தியாக உள்ள கிரீசன் நம்பூதிரியின் பதவிக்காலம், வரும் 30ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், புதிய மேல்சாந்தி தேர்வு நடந்தது.இதற்காக, 61 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதி வாய்ந்த விண்ணப்பங்களில் 58 பேர் அழைக்கப்பட்டு, தந்திரி சேனாஸ் வாசுதேவன் நம்பூதிரி முன்னிலையில் நேர்முகத் தேர்வு நடந்தது. அவர்களில் 51 பேர் தகுதி வாய்ந்தவர்கள் என, முடிவானது. அவர்களில் ஒருவரை, குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், 51 பேர்களின் பெயர் எழுதப்பட்ட சீட்டுக்களில் ஒன்றை, தற்போது கோவிலின் மேல்சாந்தியாக உள்ள கிரீசன் நம்பூதிரி எடுத்தார். குலுக்கலில், கூற்றநாடு பாவன்னூர் பகுதியைச் சேர்ந்த பொட்டக்குழி மனயிக்கல் கிருஷ்ணன் நம்பூதிரி, 36, தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன், 1968 மற்றும் 1976ம் ஆண்டுகளில் குருவாயூர் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றிய நீலகண்டன் நம்பூதிரியின் மகன். இவர் மேல்சாந்தி பதவிக்காக இரு முறை விண்ணப்பித்தும் தேர்வாகவில்லை.புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், அடுத்த 12 தினங்கள் கோவிலில் பஜனைக்காக தங்கி இருப்பார். வரும் 30ம் தேதி இரவு அத்தாழ பூஜை (ராக்கால பூஜை)க்குப் பின், புதிய பதவி ஏற்பார். இவர் தன் பதவிக்காலம் முழுவதும் கோவிலை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், கோவிலுக்கு உள்ளேயே தங்கி, பூஜை, புனஸ்காரங்களை நிர்வகிப்பார்.