Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் வனசரகத்தில் புகுந்த யானைகள் வேட்டை கும்பல் அட்டகாசம் காரணமா?

மேட்டூர் வனசரகத்தில் புகுந்த யானைகள் வேட்டை கும்பல் அட்டகாசம் காரணமா?

மேட்டூர் வனசரகத்தில் புகுந்த யானைகள் வேட்டை கும்பல் அட்டகாசம் காரணமா?

மேட்டூர் வனசரகத்தில் புகுந்த யானைகள் வேட்டை கும்பல் அட்டகாசம் காரணமா?

ADDED : ஜூலை 15, 2011 01:01 AM


Google News

மேட்டூர்: பச்சபாலமலை அடிவாரத்தில் உள்ள கிராமத்துக்குள் யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால், மேட்டூர் வனத்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மேட்டூர் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாலமலை, பச்சபாலமலை காப்புகாடு உள்ளது. இதில், பச்சபாலமலை காப்புகாட்டின் ஒரு பகுதி மேட்டூர் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனசரகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சென்னம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. மேட்டூர் வனச்சரகத்தில் யானைகள் கிடையாது. கோடைகாலத்தில் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வரண்டு விடும் என்பதால், சென்னப்பட்டி சரகத்தை சேரந்த யானைகள், தண்ணீர் தேடி, மேட்டூர் சரகத்தில் உள்ள பச்சபாலமலை அடிவார பகுதிக்கு இடம்பெயரும்.



மேட்டூர் சரகத்தில் உள்ள கும்பாரப்பட்டி, தண்டா, நீதிபுரம் பகுதியில் உள்ள ஏரிகளில் கோடைகாலத்திலும் குட்டை போல தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதால் அப்பகுதியில் சுற்றி திரியும் யானைகள் கோடை முடிந்தவுடன் சென்னம்பட்டி சரக வனப்பகுதிக்கு சென்று விடும்.



சமீபத்தில் பெய்த பருவமழையால் மேட்டூர், சென்னம்பட்டி சரக வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால், யானைகள் சென்னம்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், இரு யானைகளும், ஒரு குட்டி யானையும், சில நாட்களாக மேட்டூர் சரகம் பச்சபாலமலை அடிவாரத்தில் உள்ள கும்பாரப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளது.



இரு நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணி என்பவரை யானை விரட்டியுள்ளது. தப்பியோடிய மணி உயிர் பிழைத்தார். பகலில் வனத்தில் பதுங்கும் யானைகள், இரவில் கிராமத்தில் புகுந்து விடுகிறது. அதனால், பட்டாசுகளை கொளுத்தி யானைகளை சென்னம்பட்டி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக கோடைகாலத்தில் தான், 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மேட்டூர் சரகத்தில் முகாமிடும். வழக்கத்துக்கு மாறாக தற்போது இரு யானைகள், ஒரு குட்டி யானை மட்டும் கும்பாரப்பட்டி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது, மேட்டூர் வனச்சரக ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.



வேட்டை கும்பல் யானைகளை கொல்வதற்காக துப்பாக்கியால் சுடும் பட்சத்தில் கூட்டமாக வசிக்கும் யானைகள் வனத்தின் பல பகுதிகளுக்கும் சிதறி ஓடி விடுவது உண்டு. அதுபோல வனப்பகுதியில் வேட்டை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டால் யானைகள் திசைமாறி கும்பாரபட்டி வனப்பகுதிக்கு வந்திருக்க கூடும் என கருதுகின்றனர். எனவே, யானைகள் உணவு மற்றும் நீருக்காக கும்பாரபட்டி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதா அல்லது யானை வேட்டை கும்பலை சேர்ந்தவர்கள் வனத்தில் பதுங்கியுள்ளனரா? என, மேட்டூர் சரக வனத்துறையினர் எல்லையோர கிராமங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us