
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., பிருந்தா கராத் பேச்சு : பண வீக்கத்தால், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் பிரச்னைகளுக்கு, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேச்சு: தி.மு.க.,வை பொறுத்தவரை எந்தச் சோதனைகள், வேதனைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பொறுத்துக் கொண்டு, அதை ஒரு சவாலாகவே எண்ணி, மக்கள் நலனுக்காக தன் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுத்திடவோ, மறைத்திடவோ முடியாது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை: ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, டில்லியில், அறவழியில் போராட்டம் நடத்த முயன்ற அன்னா ஹசாரேவை கைது செய்ததை, இந்து மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஊழலுக்கு எதிரான அறப் போராட்டங்களை, நசுக்கும் உள்நோக்கத்துடன், சர்வாதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உலகின் எல்லா மோனோ ரயில் திட்டங்களின் ஒட்டுமொத்த நீளத்தையும் கூட்டினால், அது வெறும், 400 கி.மீ., மட்டுமே வருகிறது. உலக நிலவரம் இவ்வாறு இருக்கும் போது, தமிழக அரசு சென்னையில் மட்டும், 300 கி.மீ., தொலைவிற்கு மோனோ ரயில் அமைக்கப் போவதாக கூறுவது நடைமுறை சாத்தியமில்லாதது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி : கட்சிப் பதவிகளில் இளைஞர்கள் வர வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், 60 வயதிற்கு மேற்பட்டோர் தகுதி குறைவானவர்கள், 60 வயதிற்குட்பட்டவர்கள் தான் திறமையானவர்கள் என கருதவில்லை. 78 வயதில் பிரதமர் திறம்பட செயல்படவில்லையா?
மூ.மு.க., நிறுவன தலைவர் சேதுராமன் அறிக்கை: பல கோடி ரூபாய் செலவில், அண்ணா சாலையில் கட்டப்பட்ட தலைமைச் செயலக கட்டடத்தில், ஏழைகளுக்கு மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைப்பது வரவேற்கத்தக்கது. இந்த கட்டடத்தை ஏழைகளுக்கு அர்ப்பணித்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
பிரதமரின் ஆலோசகர் அரங்கராஜன் பேச்சு: தற்போது, சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, பொருட்களைச் சுழற்சியில் விடும் முறையால் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் வளர்ச்சி ஏற்படும்; அந்த வகையில் மீண்டும் மூலதனப் பொருட்களின் எண்ணிக்கை, படிப்படியாக அதிகரிக்கும். அடுத்த இரண்டு காலாண்டுகளில், நிலைமை மேலும் வளர்ச்சி அடையும்.
இந்திய வர்த்தக தொழில் துறை கட்டமைப்பின் தலைவர் ஹர்ஷ் மாரிவாலா பேச்சு: அன்னா ஹசாரே போராட்டத்தில், ஜனநாயக அமைப்புகளையும், மரபுகளையும் வலுப்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரமாகச் செயல்படும் ஒரு ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகள் ஆகியவை மூலம் தான், முதலீடுகளை ஈர்க்க முடியும். அவற்றைப் பாதுகாத்து மேலும், அதிகப்படுத்த முடியும்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் அறிக்கை: எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும், அது அரசியல் சாசனத்திற்கு முரணாக இருக்கக் கூடாது. சமீபகாலமாக, இந்தியாவில் சூழ்ந்த இருளை வெளிச்சம் போட்டுக் காட்டி வரும் நீதித் துறையை, யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வரக் கூடாது. லோக்பால் சட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டால், அதன் சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும். நீதிபதிகளை மற்றவர்கள் நிர்பந்திக்கும் நிலை உருவாகும். அதன் மூலம், ஜனநாயகத்தின் நோக்கம் பறிக்கப்பட்டு விடும்.
பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு: பொருளாதார சீர்திருத்தம் என்பது, சரியான புரிதல் இல்லாமலேயே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. சர்வதேச பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார சீர்திருத்தம் உடனடி அவசியம் என்பதை சிந்திக்க வைத்துள்ளது. இன்றைய சூழலில் அந்த சீர்திருத்தம் இந்தியாவிற்கு கட்டாயத் தேவையாக உள்ளது.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பேச்சு: மத்திய அமைச்சரவை மூலம், பார்லிமென்டில் வைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதா, ஊழல்வாதிகளை பாதுகாக்கவும், கள்ளச் சந்தையில் கறுப்பு பணம் வைத்திருப்போரை பாதுகாக்க உதவுமே தவிர, உண்மையில் ஊழலை ஒழிக்க உருப்படியான அம்சங்கள் அந்த மசோதாவில் எதுவும் இல்லை.
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் வாகை முத்தழகன் பேட்டி: நில மோசடி, கந்துவட்டி பிரச்னைகளில் சிக்குபவர்கள், கோடிகளில் புரண்டவர்கள். அதை, அவர்கள் கோர்ட்டில் பார்த்துக் கொள்வர். அவர்களிடம் தேவையான பணம் இருக்கிறது. ஆனால், அப்பாவி தி.மு.க., தொண்டன் மீது பழிவாங்கும் விதமாக அ.தி.மு.க., கைது நடவடிக்கை எடுக்கிறது என்றால், கொதித்து எழுவதில் தவறில்லை. அப்பாவி தொண்டனுக்கு தலைமை உதவி செய்யுமா என்பது தான் ஒவ்வொரு தி.மு.க., தொண்டனின் கேள்வி.


