/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம்அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம்
அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம்
அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம்
அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரம்
UPDATED : செப் 07, 2011 02:00 AM
ADDED : செப் 07, 2011 01:51 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், அரசு பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரை கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, நிதி நாடும் பள்ளி, அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆகியவற்றில், முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும், மாணவ, மாணவியருக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, 1561 பள்ளிகளில், 2 லட்சத்து, 5 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
நகர்புறத்தில் உள்ள பள்ளிகளில், சில மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதில்லை. சில பள்ளிகளில் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, கூடுதல் மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர்.காஞ்சிபுரம் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்றில், 176 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் முதல் வகுப்பு மாணவர்கள் 20 பேருக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு 36 மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வெளியில் சென்று விட்டனர். இது, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால், கூடுதலாக 16 மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதாக, கணக்கிடப்படுகிறது.இதுபோன்று, பல தவறுகள் நடைபெறுகின்றன. சில இடங்களில், அதிகாரிகள் பள்ளிகளுக்கு குறைந்த அளவு உணவுப் பொருட்களை வழங்கி விட்டு, மீதமுள்ள பொருட்களை வெளியில் விற்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக, பள்ளிகளில் உண்மையாக சத்துணவு சாப்பிடும் மாணவர்களை, கணக்கெடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அதற்காக, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெற்றோரிடம், விண்ணப்பப் படிவம் ஒன்றை பூர்த்தி செய்து, கையெழுத்து பெற வேண்டும் என, சத்துணவு அமைப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பப் படிவத்தில், மாணவர் பெயர், வயது, தந்தை பெயர், முகவரி, படிக்கும் பள்ளியின் பெயர், படிக்கும் வகுப்பு, எந்த மதம், ஏற்கனவே மதிய உணவு பெற்றவரா, பெற்றோர் தொழில், போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.அதற்கு கீழே, நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள். இப்பள்ளியில், தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் மதிய உணவு, முட்டை ஆகியவற்றை என் மகன் அல்லது மகளுக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பப் படிவத்தில், மாணவர், பெற்றோர், சத்துணவு அமைப்பாளர், தலைமை ஆசிரியர் ஆகியோர் கையொப்பமிட வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து, விண்ணப்பப் படிவத்தில் கையெழுத்து வாங்கும் பணியை துவக்கி உள்ளனர்.காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) கோபாலகிருஷ்ணன் கூறும்போது,'பள்ளியில் சேரும் அனைத்து மாணவ, மாணவியரும், சத்துணவு சாப்பிட தகுதி பெற்றவர்கள். எனினும், மாணவர்கள் பலர், சத்துணவு சாப்பிடுவதில்லை. வீடு அருகிலிருந்தால், வீட்டிற்கு சென்று விடுகின்றனர். எனவே, உண்மையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களை கண்டறிவதற்காக, விவரங்களை சேகரித்து வருகிறோம். இதன் மூலம், சத்துணவுத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதையும் தடுக்க முடியும்' என்றார்.
ம.அறம்வளர்த்தநாதன்


