Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/குடிமங்கலம் பகுதியில் தென்னையில் மர்மநோய் தாக்குதல் வேகமாக பரவுகிறது

குடிமங்கலம் பகுதியில் தென்னையில் மர்மநோய் தாக்குதல் வேகமாக பரவுகிறது

குடிமங்கலம் பகுதியில் தென்னையில் மர்மநோய் தாக்குதல் வேகமாக பரவுகிறது

குடிமங்கலம் பகுதியில் தென்னையில் மர்மநோய் தாக்குதல் வேகமாக பரவுகிறது

ADDED : செப் 07, 2011 12:38 AM


Google News
உடுமலை : உடுமலை அருகே தென்னை மரங்களில் பரவி வரும் மர்ம நோய் தாக்குதலுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டு கருகியுள்ளன.

நோயை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கருகிய மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடிமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கொசவம்பாளையம், முத்துசமுத்திரம் போன்ற பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நத்தை புழு தாக்குதல் பரவி நூற்றுக் கணக்கான மரங்கள் கருகின. தற்போது, மூங்கில்தொழுவு பகுதியில் பரவி வரும் மர்ம நோய் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்மநோய் தாக்குதல் தென்பட்டுள்ளது. முதற்கட்டமாக மரங்களின் ஓலைகளில் பச்சையம் குறைந்து மஞ்சள் நிறத்திற்கு மாறியுள்ளது. பின்னர் ஒவ்வொரு ஓலையாக கீழே விழுந்ததுடன், காய்ப்பிலுள்ள இளநீர் மற்றும் தேங்காய் ஆகியவை குலையுடன் கீழே விழுந்துள்ளது.படிப்படியாக மேற்பாகம் முழுவதும் வெற்றிடம் போல் மாறி, குருத்தும் காய்ந்து விடுவதால் மரம் முழுவதுமாக கருகியுள்ளது. பல ஆண்டுகள் வளர்த்த மரங்கள் குறுகிய நாட்களுக்குள் கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயி மாசிலாமணி என்பவரது தோட்டத்தில் துவங்கிய இந்நோய் தாக்குதல் வேகமாக அருகிலுள்ள தோட்டங்களுக்கும் பரவியது. காய்ப்பு திறனிலுள்ள 15 ஆண்டுகளுக்கும் மேலான தென்னை மரங்கள் அடியோடு காய்ந்ததால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகள் தெரியாமல், பல ஆயிரம் ரூபாய் செலவிட்டு மரங்களின் வேர்களுக்கு விவசாயிகள் மருந்து கட்டி வருகின்றனர். இருப்பினும் நோய் தாக்குதல் கட்டுப்படவில்லை. இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: மர்ம நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தெரியவில்லை. பல ஆண்டுகள் வளர்ந்த மரங்களின் மேல்பகுதியில் தாக்குதல் துவங்குவதால் நோய் பரவுவது தெரிவதில்லை. ஓலைகள் நிறம் மாறி, காய்கள் கீழே விழும் போதுதான் மரத்தை நோய் தாக்குவது தெரிகிறது. மரங்கள் காய்வதால் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ப்பிலுள்ள மரங்கள் கருகுவதால், விளைச்சல் கிடைப்பதில்லை. புதிதாக தென்னை நாற்றுகள் நடவு செய்து அவை காய்ப்பு திறனுக்கு வருவதற்கு ஐந்து ஆண்டுகளாகும்.வேளாண்துறை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி சென்றுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உடனடியாக இப்பகுதியில் ஆலோசனை முகாம் நடத்த வேண்டும். கருகிய மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். மதிப்பிட முடியாது 15 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த தென்னை மரங்கள் திடீரென கருகும் போது அவற்றின் மதிப்பை மதிப்பிட முடியாது என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் வரை மரங்கள் காய்ப்பு திறனில் இருக்கும். ஆண்டிற்கு குறிப்பிட்ட தேங்காய் விளைச்சல் கிடைப்பதுடன், தென்னை மட்டை போன்றவையும் விவசாயிகளுக்கு வருமானம் அளிக்கும். கருகிய மரங்களுக்கு மாற்றாக நடப்படும் தென்னங்கன்றுகள் காய்ப்பு திறனுக்கு வர ஐந்து ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை வருவாய் பாதிப்பு ஏற்படுவதால், இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us