Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மந்தகதியில் மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்கள் முழுவீச்சில், "மார்க்கெட்டிங்' செய்ய தமிழக அரசு முடிவு

மந்தகதியில் மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்கள் முழுவீச்சில், "மார்க்கெட்டிங்' செய்ய தமிழக அரசு முடிவு

மந்தகதியில் மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்கள் முழுவீச்சில், "மார்க்கெட்டிங்' செய்ய தமிழக அரசு முடிவு

மந்தகதியில் மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்கள் முழுவீச்சில், "மார்க்கெட்டிங்' செய்ய தமிழக அரசு முடிவு

ADDED : ஆக 07, 2011 01:03 AM


Google News

சென்னை : தலைநகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள், வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்க, தென் மாவட்டங்களில் உள்ள பூங்காக்கள், ஈயோட்டிக் கொண்டிருக்கின்றன.

தகவல் அறிந்த முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக அவற்றை முழுவீச்சில் இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தரமணி டைடல் பூங்கா, சோழிங்கநல்லூர் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், ஐ.டி., விற்பன்னர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன. அதைப் பார்த்து ஆர்வம் கொண்ட தமிழக அரசு, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், ஓசூர், வேலூர் என, மாநிலம் முழுவதும் ஐ.டி., பூங்காக்களை உருவாக்க முடிவெடுத்தது. ஆனால், தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்வம் காட்டிய தனியார் நிறுவனங்கள், தென் மாவட்டங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. 2009-2010ம் ஆண்டுக்கான, தமிழகத்தின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி, 37 ஆயிரம் கோடி ரூபாய். சென்னை தவிர பிற நகரங்களின் மொத்த பங்கு, 900 கோடி ரூபாய். மதுரையின் பங்கு, வெறும், 28 கோடி ரூபாய் தான். அந்த அளவுக்குத் தான் இருக்கிறது சங்கம் வளர்த்த நகரின் நிலைமை.



மதுரை மாவட்டம் இலந்தைகுளத்தில், 29 ஏக்கரிலும், வடபழஞ்சியில், 245 ஏக்கரிலும், இரண்டு ஐ.டி., பூங்காக்கள் அமைக்கப்பட்டன. தேர்தல் திருவிழாவை ஒட்டி, இலந்தைகுளம் பூங்கா, அவசரகதியில் கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்டது. 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்ற கதையாக, ஹனிவேல், செல்லா சாப்ட்வேர் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமே, இங்கு இட ஒதுக்கீடு பெற்றுள்ளன. அவர்களும் பணியைத் துவக்கியதாக தகவல் இல்லை. மதுரைக்கே இந்த நிலைமை எனும் போது, நெல்லையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

தங்கள் நிறுவனங்களை இங்கு அமைக்க ஒப்புதல் தெரிவித்த பல பெரிய நிறுவனங்கள், பின்வாங்கி விட்டன. சத்யம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தன் விரிவாக்கத்தை, மதுரையில் செயல்படுத்த ஒப்புதல் அளித்திருந்தது. அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஊழல் காரணமாக அது நடக்கவில்லை. ஐ.டி., பூங்கா காரணமாக மதுரையில் இடமதிப்பு பெருமளவு உயர்ந்தது தான் மிச்சம். இதற்கு, முந்தைய ஆட்சியில், தென் மாவட்டங்களில் நிலவிய சாதகமற்ற சூழ்நிலை, முக்கியமான காரணம். சரியான கட்டமைப்பு வசதிகளும் இல்லாததால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சென்னை, பெங்களூரு நகரங்களைத் தாண்டி நகரவில்லை.



ஆனால், ஐ.டி., துறையில், தென் மாவட்டங்களில் இருந்து தான் அதிகளவு மனித வளம் கிடைக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் பணிபுரியும் ஐ.டி., பட்டதாரிகளில், 30 சதவீதம் பேர் தென் மாவட்டத்தினர். ஆனால், இவர்களின் உடனடி வேலை திறன் மந்தமாக உள்ளது. அவர்கள், பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், படித்தவுடன் வேலையில் அமரும் அளவுக்கு தொழில்நுட்பங்களை பிரயோகிக்கும் திறன், மென்திறன்களில் பின்தங்கியுள்ளனர்.



இதுகுறித்து, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை உயரதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தென்மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் பற்றி, முதல்வர் ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டுள்ளார். அவற்றை முழுவீச்சில் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், செயலர் சந்தோஷ்பாபு உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், திருச்சி, மதுரை, நெல்லை பூங்காக்களைப் பார்வையிட உள்ளனர். முந்தைய ஆட்சியில், இந்தப் பூங்காக்களின், 'மார்க்கெட்டிங்' பலவீனமாக இருந்தது உண்மை. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின், 'மார்க்கெட்டிங்' பணிகள் மறுபடியும் துவங்க உள்ளன. முதல்வர் விருப்பப்படி, மாநிலம் முழுவதும் உள்ள தொழிலதிபர்கள், புனே, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள தொழிலதிபர்களை நேரில் சந்தித்து, அழைப்பு விடுக்க உள்ளோம். பத்திரிகைகள் மற்றும் விமான நிலையங்களில் விளம்பரங்கள், மேற்கொள்ள உள்ளோம். இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், இந்தப் பூங்காக்கள் முழுமையாக செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கிவிட்டன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.



- நமது நிருபர் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us