ADDED : ஆக 28, 2011 12:38 AM
மதுரை : மதுரை தனக்கன்குளம் ஜெயகுமார் மனைவி லதா.
கடந்த ஆண்டு பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையுடன் பெண் ஒருவர் மாயமானார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார் லதா. ஒரு பெண்ணிடம் குழந்தையை பெற்ற திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த துர்க்காதேவி என்பவர் நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவரது தோற்றம், கடந்தாண்டு லதாவின் குழந்தையுடன் மாயமானவரை போல இருந்தது. போலீசில் இதை தெரிவித்ததும் போலீசார் துர்க்காதேவியை விசாரித்தனர். இதில் மாயமான பெண் அவர்தான் என ஏறக்குறைய முடிவானதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. விசாரணை சூடுபிடித்துள்ளதால், போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. துர்காதேவிதான் உண்மையான குற்றவாளியா? என உறுதிப்படுத்த தனிப்படை போலீசார் திண்டுக்கல் சென்றுள்ளனர்.


